முகப்பு
தமிழ்நாடு

இலங்கை அரசை தண்டிக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழக மீனவர்கள் 139 பேரைக் கைது செய்துள்ள இலங்கை அரசை தண்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Updated On : 2 ஆகஸ்ட், 2013 at 1:23 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:17 PM

தமிழக மீனவர்கள் 139 பேரைக் கைது செய்துள்ள இலங்கை அரசை தண்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 65 மீனவர்களை செவ்வாய்க்கிழமை இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்தத் தகவல் வந்து சேருவதற்கு முன்பாகவே கோடியக்காடு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 74 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தாலும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் இலங்கை கடற்படையினரின் வாடிக்கையாக இருக்கிறது.

Advertisement

இந்திய எல்லைப் பகுதியிலேயே 139 பேரையும் கைது செய்திருப்பதால், அதைக் கைதாக கருதாமல் கடத்தலாகக் கருத வேண்டும். கடத்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் வருவாய் இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர்.

எனவே 139 மீனவர்கள் உள்பட ஏற்கெனவே சிறையில் உள்ளவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு சில துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாகவே இப்பிரச்னைக்கு முடிவு கட்ட இயலும்.

இந்திய எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை தாக்குவதும், கடத்துவதும் சட்ட விரோதமானவை என்பதால் இவற்றுக்கு காரணமான இலங்கைப் படையின் அதிகாரிகள் மீது தமிழக காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

அதனடிப்படையில் இன்டர்போல் உதவியுடன் இலங்கைப் படையினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.