மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜர்
நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்த மோதல் வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்.
நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்த மோதல் வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் விஜயகாந்த், ஜூலை 1 ஆம் தேதி ஆஜரானார். அப்போது, அரசு வழக்குரைஞர்களுக்கும், தேமுதிகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக அரசு வழக்குரைஞர் ஞானசேகரன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் விஜயகாந்த் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
Advertisement
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதில் அவருக்கு, நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜராகி இருநபர் சொத்துப் பிணையம் அளித்து முன்ஜாமீன் பெற வேண்டும், சென்னை பெருநகர நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிபந்தனையைத் தளர்த்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மற்றொரு மனு தாக்கல் செய்தார். இதில், நிபந்தனையைத் தளர்த்திய நீதிபதி ஆர். மாலா, மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற உத்தரவிட்டார். மேலும், சென்னை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையையும் தளர்த்தி உத்தரவிட்டார்.
அதையடுத்து, மதுரை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் திரிவேணி, விஜயகாந்துக்கு முன்ஜாமீன் வழங்கினார். நீதிமன்றத்தில் ஆஜராக விஜயகாந்த் வந்ததையடுத்து, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேமுதிகவினர் ஏராளமானோர் குவிந்தனர்.