முகப்பு
தமிழ்நாடு

உணவு மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் எதிர்ப்போம்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி விளக்கம்

உணவுப் பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளாவிட்டால் அதனை எதிர்ப்போம் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

Updated On : 12 ஆகஸ்ட், 2013 at 1:58 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:17 PM

உணவுப் பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளாவிட்டால் அதனை எதிர்ப்போம் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மசோதாவை திமுக எதிர்க்குமா ஆதரிக்குமா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்து ஞாயிற்றுக்கிழமை கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

Advertisement

உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கான திருத்தங்களை நாடாளுமன்றத்தில் திமுக கொடுக்குமா என்று ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஜெயலலிதா கேட்டுள்ளார்.

ஆனால் ஆகஸ்ட் 7-ஆம் தேதியே நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு மசோதாவுக்கான திருத்தங்களைக் கொடுத்துவிட்டார். இதை அறிந்துகொள்ளவில்லை போலும்.

மசோதாவுக்கு எதிர்ப்பு: உணவு மசோதாவை எதிர்ப்போம் என்று கருணாநிதி கூறவில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

பிரதமருக்கு, ஜெயலலிதா எழுதிய கடிதத்தில்கூட, உணவு மசோதாவில் தேவையான திருத்தங்கள் வேண்டும் என்றுதான் கூறியுள்ளார்.

மாநில உரிமைகளுக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படாதளவு திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, உணவு மசோதாவை ஆதரிப்போம் என்றுதான் கூறியுள்ளேன்.

உணவு மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றால், அதற்கு எதிராக திமுக வாக்களிக்குமா என்று ஜெயலலிதா கேட்டுள்ளார்.

பல்வேறு கட்சியினரும் தெரிவித்துள்ள முக்கியமான திருத்தங்கள் மசோதாவில் மேற்கொள்ளப்பட்டால், அதனை திமுக ஆதரிக்கும். திருத்தங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற நிலையில் மத்திய அரசு உறுதியாக இருந்தால், மசோதாவை திமுக எதிர்க்கும்.

இதை பலமுறை எடுத்துக் கூறிய பிறகும், தொடர்ந்து ஜெயலலிதா இவ்வாறு கூறுவது கண்டிக்கத்தக்கது.

எது துரோகம்? சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை முதலில் கண்டித்த கருணாநிதி, பிறகு நாடாளுமன்றத்தில் அதனை ஆதரித்து வாக்களித்தது துரோகமில்லையா என்று ஜெயலலிதா கேட்டுள்ளார்.

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியது உண்மைதான். ஆனால், அன்னிய நேரடி முதலீட்டைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று ஜெயலலிதா கூறிவிட்டதால்தான், அதனை ஆதரித்தோம்.

காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து, அப்போது மத்தியில் கூட்டுப் பொறுப்போடு செயல்பட்டதால்தான் வாக்குப் பதிவின்போது அவ்வாறு நடந்துகொள்ள வேண்டியிருந்தது. இது துரோகமோ, இரட்டை வேடமோ இல்லை. கூட்டணிக் கட்சியை ஆதரிக்காமல் விட்டிருந்தால்தான் அது அரசியல் துரோகமாகும்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தால், உணவு மசோதாவை ஆதரிப்போம் என்று காங்கிரஸýக்கு திமுக வாக்குறுதி அளித்துள்ளதாக ஜெயலலிதா கூறுவதில் உண்மையில்லை.

7 கேள்விகளுக்குப் பதில்: உணவு மசோதா தொடர்பாக 7 கேள்விகளை ஜெயலலிதா என்னிடம் எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் பொது விநியோகத் திட்டத்துக்கு எந்த வகையிலும் ஊனம் ஏற்பட்டுவிடக் கூடாது. மாநில உரிமைகள் பறிபோய்விடக் கூடாது என்று ஏற்கெனவே கூறியுள்ளேன்.

இதையே ஜெயலலிதாவின் 7 கேள்விகளுக்கும் பதிலாக அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.