உளுந்தூர்பேட்டை சம்பவத்துக்கு அன்புமணி வருத்தம்
உளுந்தூர்பேட்டை சம்பவத்துக்கு பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி வருத்தம் தெரிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை சம்பவத்துக்கு பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பொய்யானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நடந்த சிறு மோதல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு என்னையும் சேர்த்துள்ளது.சுங்கச்சாவடியில் நடந்த நிகழ்வு தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும். அதற்காக என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
என்னைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே ஜனநாயக நெறிமுறைகளையும், சட்டத்தையும் காற்றில் பறக்கவிட்டு, தமிழக அரசு பொய் வழக்கு தொடர்ந்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் என் கார் உள்பட சில கார்களை முதலில் அனுமதித்துவிட்டு, பின்னால் வந்த கார்களைத் தடுத்துவிட்டனர்.
சுங்கச்சாவடி பணியாளர்கள் பாமக நிர்வாகிகளிடம் வம்புக்கு இழுத்து தகராறு செய்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சிறிது தூரம் சென்ற பிறகே இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தது. பொது சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கட்சி நிர்வாகிகளைக் கண்டித்தேன்.
மேலும், தொடர்புடைய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறும் நிர்வாகிகளிடம் கூறினேன். ஆனால் இந்தச் சம்பவத்துக்கு நான்தான் காரணம் என்பதுபோல, காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழக காவல்துறை என்பது எதிர்க்கட்சித் தலைவர்களைப் பழிவாங்குவதற்கான கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. பாமகவினர் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.