"தலைவா' உள்பட புதிய திரைப்படங்களின் டி.வி.டி.க்கள் சிக்கின: மூவர் கைது
சேலத்தில் "தலைவா' புதிய திரைப்படங்களின் டி.வி.டி.க்களை ஆயிரக்கணக்கில் தயாரித்ததாக மூவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சேலத்தில் "தலைவா' புதிய திரைப்படங்களின் டி.வி.டி.க்களை ஆயிரக்கணக்கில் தயாரித்ததாக மூவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
நடிகர் விஜய் நடித்துள்ள தலைவா திரைப்படம் தமிழகத்தைத் தவிர அண்டை மாநிலங்களில் வெள்ளிக்கிழமை வெளியாகி, அங்குள்ள திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தலைவா திரைப்படத்தின் திருட்டு டிவிடி.க்கள் சேலத்தில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள அத்வைத ஆஸ்ரமம் சாலையில் உள்ள ஒரு மாடி வீட்டில் தலைவா திரைப்பட டிவிடி.க்கள் ஆயிரக்கணக்கில் தயாரிக்கப்படுவதாக விஜய் ரசிகர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரசிகர் மன்ற ஆலோசகர் டி.பாலு, செய்தித் தொடர்பாளர் நடராஜன் உள்பட ஏராளமானோர் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்றனர். அப்போது, ஒரு வீட்டின் மாடியில் ஆயிரக்கணக்கில் திருட்டு டிவிடி.க்கள் தயாரிக்கப்படுவது தெரிந்தது. உடனடியாக இதுகுறித்து சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் சந்திரசேகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அவரது உத்தரவின் பேரில், அழகாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 6 கணினிகளைக் கொண்டு ஆயிரக்கணக்கில் தலைவா, பட்டத்து யானை, மரியான் உள்பட புதிய திரைப்படங்களின் டிவிடி க்கள் திருட்டுத் தனமாக தயாரிக்கப்பட்டது தெரிந்தது.
இதையடுத்து, திருட்டு டிவிடி தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கணினிகள், விற்பனைக்கு தயார் செய்யப்பட்டிருந்த டிவிடி.க்கள் உள்பட அனைத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். திருட்டு டிவிடி தயாரித்ததாக தருமபுரியைச் சேர்ந்த முரளி (28), குமார் (38), அருள் பிரபு (34) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த நிறுவனம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ராஜா (26) என்பவருக்குச் சொந்தமானது என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.
முன்னதாக, திருட்டு டிவிடி தயாரிக்கும் நிறுவனம் எதிரில் திரண்ட ஏராளமான விஜய் ரசிகர்கள், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, அவர்களை உதவி ஆணையர் சந்திரசேகரன் அங்கிருந்து வெளியேற்றினார். இதுதொடர்பாக விஜய் ரசிகர்கள் கூறியது: "தலைவா' திரைப்படம் வெள்ளிக்கிழமை பிற மாநிலங்களில் வெளியானது. ஆனால், தமிழகத்தில் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை முதலே இந்தத் திரைப்படத்தின் டி.வி.டி.க்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றனர் அவர்கள்.