முகப்பு
தமிழ்நாடு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுர வாயில்களில் நவீன ஸ்கேனர்கள்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பக்தர்களின் உடைமைகளை தெள்ளத் தெளிவாகக் காட்டும் வகையிலான நவீன ஸ்கேனர்களை கோயில் கோபுர வாயில்களில் ரூ.85 லட்சத்தில் அமைக்க, இந்து சமய அறநிலையத் துறை அனுமதியளித்துள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட், 2013 at 2:55 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:17 PM

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பக்தர்களின் உடைமைகளை தெள்ளத் தெளிவாகக் காட்டும் வகையிலான நவீன ஸ்கேனர்களை கோயில் கோபுர வாயில்களில் ரூ.85 லட்சத்தில் அமைக்க, இந்து சமய அறநிலையத் துறை அனுமதியளித்துள்ளது.

உலக புராதன நகரங்களில் ஒன்றான மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலை மையமாக வைத்தே அமைந்துள்ளது. இக் கோயிலுக்கு தினமும் சுமார் 90 ஆயிரம் பேர் வருகின்றனர். ஏராளமான வெளிநாட்டவரும் வருகின்றனர்.

பண்பாடு, கலாசாரச் சின்னமாக விளங்கும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாதிகள் மிரட்டல் இருந்து வருகிறது. இதனால், திருக்கோயிலுக்கு காவல் உதவி ஆணையர் தலைமையில் சுமார் 150 போலீஸார் 24 மணி நேரப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

திருக்கோயிலுக்குள் தினமும் 3 முறை வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் சோதனையிடுகின்றனர். பக்தர்களைப் பரிசோதிக்க கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்குக் கோபுர வாசல்களில் மெட்டல் டிடெக்டர் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோயிலுக்குள்ளே கண்காணிப்புக் காமிராக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் காட்சிகள் தனியாகக் கண்காணிக்கப்படுகின்றன.

திருக்கோயிலுக்குத் தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், சித்திரை வீதிகளில் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, பைனாகுலர் உள்ளிட்டவை மூலம் போலீஸார் இரவு, பகலாகக் கண்காணித்து வருகின்றனர்.

திருக்கோயிலுக்கான பாதுகாப்பு முறையால் பக்தர்களின் பொருள்களை உடன் எடுத்துச்செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், திருக்கோயில் விழாக்களின்போது காமிராக்களைக்கூட கோயிலுக்குள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதையடுத்து, கோயிலுக்குள் செல்லும் பக்தர்களின் பொருள்களைத் தெளிவாகக் காட்டும் வகையிலான நவீன ஸ்கேனர்கள் அமைக்க காவல் துறை சார்பில் திருக்கோயில் நிர்வாகத்திடம் கோரப்பட்டது. திருக்கோயில் இணை ஆணையர் பி.ஜெயராமன் இந்து சமய அறநிலையத் துறை ஆணையகத்துக்கும் தகவல் தெரிவித்திருந்தார். தற்போது ஸ்கேனர்கள் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே, ஓரிரு வாரங்களில் திருக்கோயிலின் 5 கோபுர வாயில்களிலும் நவீன ஸ்கேனர்கள் தலா ரூ.17 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ளன. அதற்கான ஸ்கேனர்களும் தற்போது வரவழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஸ்கேனர்கள் அமைக்கப்பட்டால் காவல் துறையினரின் கெடுபிடி குறைந்து, பக்தர்கள் பொருள்களைச் சோதனைக்குப் பிறகு கோயிலுக்குள் கொண்டு செல்லும் நிலை ஏற்படும் எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.