மத்திய அரசைக் கண்டித்து 19-ல் சமக ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதையும், கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்த இருப்பதையும் கண்டித்து ஆகஸ்ட் 19-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த சமத்துவ மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதையும், கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்த இருப்பதையும் கண்டித்து ஆகஸ்ட் 19-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த சமத்துவ மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், தொகுதிச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் தென்காசி குத்துக்கல்வலசையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் நாராயணன், மாநில பொதுச்செயலர் கரு.நாகராஜன், பொருளாளர் சுந்தரேசன், அமைப்புச் செயலர் ஆர்.காளிதாசன், கொள்கைபரப்புச் செயலர் ஜெயபிரகாஷ், கலை இலக்கிய அணிச் செயலர் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் பேசினர்.
கூட்டத்தில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு கண்டனமும், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மறைவுக்கு இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
கடந்த 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கட்சியின் முப்பெரும் விழா கூட்ட தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களை தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கும் போதிய நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும். வீட்டுக்கு ஒரு விவசாயி உருவாக வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, அந்தந்தப் பகுதிகளின் மண் வளத்தை அறிந்து மாவட்டந்தோறும் மாதிரி விவசாயப் பண்ணைகளை அமைத்து அதை லாபமுள்ள தொழிலாக உருவாக்கிக் காட்டிடும் முயற்சியில் சமத்துவ மக்கள் கட்சி ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மேற்கு மாவட்டச் செயலர் தங்கராஜ், இளைஞரணி மாவட்டச் செயலர் கே.வி.கே.துரை, நகரச் செயலர் அருணா, வில்சன், கே.வி.கே.கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.