செய்யூர் அனல் மின் நிலையத்துக்காக கையகப்படுத்தியதில் 82% விவசாய நிலங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அனல் மின் நிலையத்துக்காக கையகப்படுத்தியவற்றில் 82 சதவீத நிலங்கள் விவசாய நிலங்கள் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அனல் மின் நிலையத்துக்காக கையகப்படுத்தியவற்றில் 82 சதவீத நிலங்கள் விவசாய நிலங்கள் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மிகப்பெரிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்காக துறைமுக உரிமமும், சுற்றுப்புறச்சூழல் அனுமதியும் பெறுவதற்கு பல பொய்யான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் கூறினர்.
இந்தத் திட்டம் காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான அறிக்கை சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
Advertisement
Advertisement
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.ஜனகராஜன், சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையத்தைச் சேர்ந்த நந்திதா கிருஷ்ணா, சூழலியல் ஆய்வாளர் நித்யானந்த் ஜெயராமன் உள்ளிட்டோர் இதுதொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் கூறியது:
முதலியார்குப்பம் முதல் ஆலம்பரை ஆகிய முகத்துவாரங்களுக்கு இடையில் அமைந்திருக்கும் நிலம்தான் செய்யூர் அனல் மின் நிலையத்திட்டத்திற்கான இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் 8-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ஏரிகள் உள்பட நிறைய ஏரிகள் உள்ளன. அனல் மின் நிலையத்திற்காகவும், அதற்கான சாம்பல் கொட்டுவதற்காகவும் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் 82 சதவீதம் விவசாய நிலங்களாக இருக்கின்றன.
அதோடு, கடலில் இருந்து 200 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் அமைந்திருக்கும் மணல் மேடு ஒன்றின் மேல் 3 லட்சம் டன் நிலக்கரி கொள்ளளவு கொண்ட நிலக்கரி கிடங்கு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக தேசிய கடல்சார் தொழில்நுட்ப மையம் (என்.ஐ.ஓ.டி.) உள்ளிட்ட அமைப்புகள் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடம் குறைந்தபட்ச விவசாயம் நடைபெறும் வளம் குன்றிய நிலம் என்று கூறியுள்ளன.
சதுப்பு நிலத் தாவரங்கள், மணல் மேடுகள், முகத்துவாரங்கள், நிலத்தடி நீர்நிலைகள் எதுவுமே இங்கில்லை எனவும் கூறியுள்ளன.
செய்யூர் தாலுகாவில் மட்டும் 82 ஏரிகள் உள்ளன. இதன் மூலம் 16 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
பொய்யான விவரங்களைக் கொடுத்து அதன் மூலம் திட்டப்பணியை இதே இடத்தில் அமைக்க முயல்வது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும். அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் பாதரசம் உள்ளிட்ட கழிவுகள் சுற்றிலும் உள்ள நீர்நிலைகளையும், மீன்களையும், உணவையும் நச்சுப்படுத்தும்.
நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக திட்டமிட்டுள்ள துறைமுகப்பாலம் கடற்கரையை அரித்துவிடும். அதோடு, மணல்மேடுகள் பாதிப்புக்கு உள்ளானால், புயல் சீற்றங்களின்போது இந்தப் பகுதியில் அதிக பாதிப்பு ஏற்படும். நிலத்தடி நீரில் கடல் நீர் கலக்கும் அபாயமும் ஏற்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்தத் திட்டத்துக்காக ஒப்புதல் பெறுவதற்காக தவறான தகவல்கள் அளித்தவர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடர உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், உள்ளூர் பகுதி மக்களும் தெரிவித்தனர்.
பனையூர் பெரியகுப்பத்தைச் சேர்ந்த மீனவர் மாரிமுத்து கூறும்போது, எங்களது கிராமத்துக்கு மிக அருகிலேயே சாம்பல் கொட்டுமிடம் தொடங்குகிறது. இந்தத் திட்டத்தால் 48 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்றார்.