முகப்பு
தமிழ்நாடு

அவதூறு வழக்கு: விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கில், புதன்கிழமை ஆஜராகாத அவருக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Updated On : 12 செப்டம்பர் 2013, 1:19 am IST
பகிர்:

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கில், புதன்கிழமை ஆஜராகாத அவருக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் அக்கட்சியின் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற்றது.

அதில் பேசிய விஜயகாந்த், தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் அவதூறாகப் பேசியதாக, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் ஏ. குப்புசாமி வழக்குத் தொடுத்தார்.

Advertisement

Advertisement

இந்த வழக்குத் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விஜயகாந்த் பிப். 27-ஆம் தேதி ஆஜரானார். அப்போது அவர் மீதான புகார் தொடர்பாக பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விஜயகாந்துக்கு அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன. "மற்ற மாவட்டங்களில் உள்ள வழக்குகள் தொடர்பாக ஆஜராக செல்வதாலும், தொகுதி மக்களைச் சந்திக்க வேண்டியிருப்பதாலும், அவரால் இங்கு ஆஜராக இயலவில்லை' என, விஜயகாந்த் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் கூறியதால் 3 முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.சேதுமாதவன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் ஜகதீசன் உள்ளிட்டோர், நீலகிரியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருப்பதால் விஜயகாந்த் இங்கு வர இயலவில்லை என, மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ஆஜராகாத விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்டும், செப்டம்பர் 23-ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.