முகப்பு
தமிழ்நாடு

சிறை அறையில் செல்போன்: நளினி மீதான வழக்கு தள்ளுபடி

வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள நளினியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 3:30 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள நளினியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள நளினி செல்போன் வைத்திருந்ததாகவும், அதை சிறை அதிகாரிகள் கைப்பற்ற முயன்றபோது கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததோடு, செல்போனை கழிவறையில் வீசியதாகவும் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

செல்போன் வைத்ததற்கான குற்றச்சாட்டுக்காக என்னை முதல் வகுப்பு சிறை அறையில் இருந்து, சாதாரண சிறை அறைக்கு மாற்றி தண்டித்த பிறகு, அதே குற்றச்சாட்டுக்கு போலீசில் புகார் கொடுத்து, கோர்ட்டில் விசாரிப்பது தவறானதாகும். அதனால், அந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

Advertisement

மனு மீது நீதிபதி பி.தேவதாஸ் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: மனுதாரர் நளினியின் அறையை சிறை அதிகாரிகள் 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சோதனை செய்தபோது, அங்கு செல்போன் இருப்பதைக் கண்டறிந்து கைப்பற்ற முயன்றபோது அதை அவர் தடுத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரித்த சிறைக் கண்காணிப்பாளர், பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் நளினி மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சிறைக் கண்காணிப்பாளர் விசாரித்து அதிகபட்ச தண்டனையாக, உயர் வகுப்பு சிறையிலிருந்து கீழ்நிலை வகுப்பு சிறை அறைக்கு நிரந்தரமாக மாற்றியுள்ளார். சிறை சட்டப்படி, ஒரு குற்றத்துக்காக சிறைக் கண்காணிப்பாளரால் தண்டனை கொடுக்கப்பட்ட பிறகும் அதே குற்றத்துக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது.

சிறைக் கண்காணிப்பாளர் தண்டனை கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். இரண்டையும் செய்ய முடியாது எனக் கூறி நளினியின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, அவர் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.