முகப்பு
தமிழ்நாடு

30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைய பூம்புகாரில் மீன்பிடித் துறைமுகம்

நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் ரூ.78.50 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை அடிக்கல் நாட்டினார். தலைமைச் செயலகத்தில் விடியோ கான்பரன்சிங் முறை மூலம் அவர் அடிக்கல் நாட்டினார்.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 1:18 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் ரூ.78.50 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை அடிக்கல் நாட்டினார். தலைமைச் செயலகத்தில் விடியோ கான்பரன்சிங் முறை மூலம் அவர் அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக கடலோர மாவட்டமான நாகப்பட்டினத்திலுள்ள பூம்புகார் கடற்கரையில் கடல் அலை சுழற்சியின் காரணமாக இயந்திர மீன்பிடி படகுகள் கடற்கரைக்கு அருகில் வந்து மீன்களை இறக்கவும், மீன்பிடி படகுகளுக்குத் தேவையான டீசல், பனிக்கட்டி மற்றும் இதர பொருள்களை ஏற்றிச் செல்லவும் இயலாத நிலை உள்ளது. இதனால் இப்போது பொருள்களை ஏற்றி இறக்குவதற்கு கட்டு மரங்களைப் பயன்படுத்தி மீனவர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது.

Advertisement

எனவே, இந்தச் சிரமத்தைப் போக்க பூம்புகாரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட வேண்டும் என்பது அந்தப் பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

பூம்புகார் பகுதி மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 1995-ஆம் ஆண்டு பூம்புகாரில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அவர் இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற காலத்தில் இந்தத் திட்டம் தொடர்பாக ரூ.40 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு இந்திய தொல் பொருள் ஆய்வியல் துறையின் ஒப்புதல் கிடைக்கப் பெற்ற பிறகு, பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தின் திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் ரூ. 78.50 கோடியில் மதிப்பில் அமைக்கப்படவுள்ள பூம்புகார் மீன்பிடி துறைமுகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை அடிக்கல் நாட்டினார். இந்தத் துறைமுகத்தில் அலைத் தடுப்புச் சுவர், படகு அணையும் சுவர், மீன் ஏலக்கூடம், சாய்வு தளம், சாலை, கான்கிரீட் தளம், மின் வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, தகவல் தொடர்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.

700 படகுகளை நிறுத்த வசதி: மீன்பிடி துறைமுகத்தினால் பூம்புகார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் தங்களது மீன்பிடித் தொழிலை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் வகையில் 11 மீட்டர் நீளமுள்ள 150 இயந்திர படகுகளும், 13 மீட்டர் நீளமுள்ள 200 இயந்திரப் படகுகளும் என 350 இயந்திர மீன்பிடி படகுகளையும், 350 நாட்டுப் படகுகளையும் நிறுத்தும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

இந்தப் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படுவதன் மூலம் 17 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைவார்கள் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்படடுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.