காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் இடைக்கால ஏற்பாடாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் மேற்பார்வைக் குழுவை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட காவிரி கண்காணிப்புக் குழுவைத்தான் புதிய பெயரில் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்காக பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்ட காவிரி ஆணையமும், மத்திய நீர்வளத் துறைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட காவிரி கண்காணிப்புக் குழுவும் பல் இல்லாத அமைப்புகளாகும். இவை கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்பட்ட போதிலும், அவற்றின் ஓர் உத்தரவைக்கூட கர்நாடக அரசு மதிக்கவில்லை.
அதனால்தான் கர்நாடகத்தில் உள்ள அணைகளைக் கையகப்படுத்தும் அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக கட்சிகளும், விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இடைக்கால ஏற்பாடாக மேற்பார்வைக் குழுவை அமைக்கலாம் என கர்நாடக அரசு வழக்குரைஞர் முன்வைத்த யோசனையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டபோது, அதை தமிழகத்தின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் செய்யத் தவறி விட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாய அமைப்புகளையும் திரட்டி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
இதைச் செய்ய தமிழக அரசும் தவறி விட்டது.
இதன் மூலம் காவிரி மேலாண்மை அமைப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது. நடப்பு பாசன ஆண்டில் வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வேதனையும் கொஞ்சநஞ்சமல்ல. வரும் ஆண்டிலும் வறட்சி தொடர்ந்தால் விவசாயிகளைக் காப்பாற்றவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
இம்மாத இறுதியில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கவுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் தண்ணீரை கர்நாடகம் அதன் விருப்பம்போல் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க வேண்டும்.
தமிழகத்துக்குத் தேவையான நீரைப் பெற உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
இதற்காக அனைத்து வழிகளிலும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.