பதிவுத்துறை சேவைக் குறைபாடு: புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண் அறிமுகம்
பதிவுத் துறை சார்பில் வழங்கப்படும் சேவைகளில் ஏற்படும் குறைகள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
பதிவுத் துறை சார்பில் வழங்கப்படும் சேவைகளில் ஏற்படும் குறைகள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசுச் செய்திக்குறிப்பு: சொத்துப் பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணப் பதிவு, திருமணப் பதிவு,சங்கங்கள், சீட்டுகள், கூட்டாண்மை நிறுவனங்கள் ஆகியவற்றையும் பதிவுத் துறை பதிவு செய்து வருகிறது.
பதிவுத்துறை வசம் ஒப்படைக்கப்படும் பிறப்பு, இறப்புப் பதிவேடுகளிலிருந்து உண்மை நகல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
இவ்வாறு பதிவுத் துறை சார்பில் வழங்கப்படும் சேவைகளில் குறைகள் ஏதாவது இருந்தால், அதனைத் தெரிவிக்க 1800 102 5174 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை அனைத்து அலுவலக நாள்களிலும் காலை10 மணிமுதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு பொதுமக்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.
இவ்வாறு பொது மக்களிடமிருந்து பெறப்படும் குறைகள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு, பதிவுத்துறைத் தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.