அரசு மீது ஆளுநருக்குத் திருப்தியில்லை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குத் திருப்தி இல்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குத் திருப்தி இல்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கடந்த வாரச் சந்திப்பின்போது, அதிமுக ஆட்சியின் செயல்பாடு குறித்து வெளிப்படையாகவே ஆளுநர் தம்மிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தின. இதன் ஒரு பகுதியாக, சென்னை வாலாஜா சாலையில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், பெரம்பூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டார். அங்கு அவர் அளித்த பேட்டி:
அனைத்துக் கட்சிக் கூட்டம்: காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக வியாழக்கிழமைகூட இருந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.
காவிரி டெல்டா பகுதியான திருச்சி முக்கொம்பில் இருந்து தொடங்கி, கடலூரில் முடிவடையும் வகையில் காவிரி உரிமை மீட்புப் பயணம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம். எந்தெந்தத் தலைவர்கள், எங்கெங்கு பங்கேற்பது, பேரணியைச் சிறப்பான வகையில் நடத்துவது என்பது குறித்த முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்படும்.
பொதுமக்கள் பங்கேற்பு: தற்போது நடைபெறுவது மக்களின் உணவுப் பிரச்னைக்கான போராட்டம். தண்ணீர் இருந்தால்தான் விவசாயம் நடைபெற்று உணவு, குடிநீர் பிரச்னைகள் தீரும் என்பதால் பொதுமக்களே முன்வந்து போராடி வருகின்றனர். எனவே,, இது கட்சி சார்பான போராட்டமல்ல. எங்களுடைய போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் என பொதுமக்களின் பங்களிப்பு முழு அளவில் இருக்கிறது.
ஆனால், ஒரு சிலர், குறிப்பாக சில ஊடகங்கள் ஆங்காங்கே கலவரம் நடைபெற்றது போல வேண்டுமென்றே வதந்தியைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். அது உண்மையில்லை. இந்தப் போராட்டம் அமைதியாக, அறவழியில் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்துக்குப் பிறகும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அனைவரும் பேசி முடிவெடுப்போம்.
திரும்பப் பெற வேண்டும்: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு விளக்கம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறது. அந்த மனுவை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு, மாநில அரசு உரிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.
ஆளுநர் கருத்து: 'தமிழக நிலவரம் குறித்து ஆளுநர் திருப்தி தெரிவித்திருக்கிறார்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறலாம். ஆனால், ஒருவார காலத்துக்கு முன்பாக என்னை அழைத்து, இந்த ஆட்சியில் நடக்கும் அலங்கோலங்களை எல்லாம் அவர் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். இந்த ஆட்சியின் மீது ஆளுநர் என்ன கருத்து வைத்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான், ஆளுநர் தனி வழியில் சென்று, ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த ஆட்சி மீது திருப்தி ஏற்பட்டிருந்தால் ஆய்வு நடத்த வேண்டிய அவசியமே அவருக்கு வந்திருக்காது. ஏற்கனவே முதல்வரும், துணை முதல்வரும் உண்ணாவிரதம் என்ற பெயரில் கபட நாடகம் நடத்தியதுபோல், தற்போது ஆளுநரைச் சந்தித்துவிட்டு வந்து, மீண்டும் ஒரு நாடகம் நடத்துகிறார்கள் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.