முகப்பு
தமிழ்நாடு

கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கரில் புறநகர் பேருந்து நிலையம்: ஓபிஎஸ் நேரில் ஆய்வு

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் அமையவுள்ள புறநகர் பேருந்து நிலையத்துக்கான இடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

Updated On : 6 ஏப்ரல் 2018, 2:25 am IST
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய அமைவிடத்தின் வரைபடத்தைப் பார்வையிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்.
பகிர்:

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் அமையவுள்ள புறநகர் பேருந்து நிலையத்துக்கான இடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென் மாவட்டப் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையான புதிய பேருந்து நிலைய திட்டம் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை சிஎம்டிஏ செயல்படுத்தவுள்ளது. அதன்படி, இந்த புதிய பேருந்து நிலையம் அமையவிருக்கும் இடத்தினை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை மாலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் புதிய பேருந்து நிலைய திட்டத்துக்கான முழு வரைபடத்தினை பார்வையிட்டு, பொதுமக்களுக்கான அடிப்படைவசதிகள், பேருந்துகள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைக்கப்பட இருப்பதற்கான விவரங்களைக் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை அவர்கள் எளிதில் சென்று பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அமைத்திட வேண்டும் என்றும், கட்டுமானப் பணிகள் தரமானதாக அமைவதை உறுதி செய்திட வேண்டும், கட்டுமானப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் துணை முதல்வர் ஓ.பி.எஸ். கூறியதாவது: தென் தமிழக மக்களின் வசதிக்கென கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்த பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அடுத்த 2 ஆண்டுகளில் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, இப்புதிய பேருந்து நிலையத்தில் மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவுள்ளன. அடுத்த ஓரிரு மாதங்களில் இப்புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவுள்ளது என்றார் துணை முதல்வர்.
இதுகுறித்து சிஎம்டிஏ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய பேருந்து நிலையத்தை அமைப்பதற்கான முதல் கட்டப் பணியாக, விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, இரண்டு மாதங்களில் அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில், கிளாம்பாக்கத்தில் ரூ. 321 கோடி மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. கோயம்பேடு, அதன் சுற்றுப்புறங்களில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்தமிழக பகுதிகளுக்குச் செல்லும் வகையிலும் இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்த பேருந்து நிலையம் சுமார் 88.52 ஏக்கர் பரப்பில் 6.40 லட்சம் சதுர அடியில் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம், 250 பேருந்துகளை ஒரே சமயத்தில் நிறுத்துவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன், 300 மாற்றுப் பேருந்துகள் நிறுத்தும் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது. மேலும், எரிபொருள் நிரப்பும் நிலையம், புறக் காவல் நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் இந்த புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. மேலும், இப்புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில், கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு மற்றும் மாநகரத்தின் இதர பகுதிகளுக்குச் செல்ல ஏதுவாக சுமார் 5 ஏக்கர் பரப்பில் தனியாக மாநகரப் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. புதிய புறநகர் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் நலனைக்கருத்தில் கொண்டு, தங்களது உடமைகளை எளிதாக எடுத்துச் செல்வதற்கென முதல் முறையாக நகரும் படிக்கெட்டுகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், தாய்மார்கள் பாலூட்டும் அறை, முதலுதவி மையம், மருந்தகம், ஓட்டுநர், நடத்துனருக்கான ஓய்வறை, பயணிகள் காத்திருப்பு அறை, குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்படவுள்ளன. அத்துடன், ஆட்டோ, கால் டாக்ஸி வாகனங்கள் நிறுத்துவதற்கும் தனியாக இடவசதி செய்யப்படவுள்ளது என்றார்.
ஆய்வின் போது, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ராஜேஷ் லக்கானி, முதன்மைச் செயல் அலுவலர் மதிவாணன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி, முன்னாள் அமைச்சர்கள் டி.கே.எம்.சின்னையா, சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments