காலமானார்: வேம்பத்தூர் கிருஷ்ணன்
எழுத்தாளர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், பதிப்பாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட வேம்பத்தூர் கிருஷ்ணன் (84) வயது மூப்பு காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள
எழுத்தாளர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், பதிப்பாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட வேம்பத்தூர் கிருஷ்ணன் (84) வயது மூப்பு காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூரில் ஆ.முத்தையாபிள்ளை, மீனாட்சியம்மாள் தம்பதியின் 8-ஆவது மகனாக 1934-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி வேம்பத்தூர் கிருஷ்ணன் பிறந்தார். பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத இவர் பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளதுடன், தேசியம், தெய்வீகம், ஒளவைத் தமிழ் ஆகிய தலைப்புகளில் 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தான் நடத்தி வந்த சுடர்மணி பதிப்பகம் மூலம் நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, எம்.ஆர்.ராதா உள்ளிட்டவர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குநர், துணை நடிகராகப் பணியாற்றி உள்ளார். அகத்தியர் பெருமை, தியானம், அருமை, திருவரங்க மகிமை உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களுக்கு கதையும், ஹிந்துமித்ரன், சனாதன தர்மபீடம் ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும், தினமணி கதிர், ஆனந்த விகடன், கல்கி உள்ளிட்ட பல வார, நாளோடுகளில் கதை, கட்டுரை, கவிதைகளும் எழுதியுள்ளார்.
இவர்களுக்கு முத்தையா, வாசுதேவன் என்ற இரு மகன்களும், தேவி என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி கே.பாப்பா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
விருது: இவரின் தமிழ்ப் பணியைப் பாராட்டி தமிழக அரசு சார்பில் தமிழ்ச் செம்மல் விருது கடந்த 2015-இல் வழங்கப்பட்டது. மேலும், சுடர்மணிக் கவிஞர், ஆன்மிக ரத்னா, தெய்வத் தமிழ்த் தொண்டர், ஒளவை சண்முகம் உள்ளிட்ட பல விருதுகளை வேம்பத்தூர் கிருஷ்ணன் பெற்றுள்ளார்.
இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சூளைமேடு சங்கராபுரம் 2-ஆவது தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் புதன்கிழமை பிற்பகல் சுமார் 1 மணி அளவில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. தொடர்புக்கு- 80722 81721.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.