ஜன.2 முதல் மத்திய அரசை கண்டித்து தொடர் பொதுக்கூட்டம்: திருநாவுக்கரசர்
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஜனவரி 2-ஆம் தேதி முதல் காங்கிரஸ் சார்பில் தொடர் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஜனவரி 2-ஆம் தேதி முதல் காங்கிரஸ் சார்பில் தொடர் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் மத்திய பாஜக ஆட்சியில் சுமார் ரூ. 1,41,205 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் மூலம் ஒரு விமானத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.526 கோடி. ஆனால், மோடி வாங்கிய விமானம் ஒன்றின் விலை ரூ.1670 கோடி.
மோடி அரசாங்கமும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ரஃபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் நாடாளுமன்றத்துக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் தவறான தகவல்களை அளித்துள்ளனர். அரசு கருவூலத்துக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள இந்த மோசமான மெகா ஊழலின் உண்மை விவரங்களை வெளிக்கொண்டுவர நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்படவேண்டும் என ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், மத்திய அரசு மறுத்து வருகிறது. அதனால், இந்த ஊழல் விவகாரத்தை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறும் மிகப்பெரிய ஜனநாயக பொறுப்பு காங்கிரஸுக்கு உள்ளது.
மேலும், தமிழகத்தின் ஆட்சியாளர்கள் பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு தங்களின் தவறான அணுகுமுறை, மக்கள் விரோதபோக்குடன் செயல்பட்டு ஊழல்களை மூடிமறைக்க முயலுகின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கினை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் தங்கள் பகுதிக்குள்பட்ட எல்லா சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஜனவரி 2- ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி முடிய தொடர் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும்.
இந்தக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் மாநில நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்களை கூட்டத்தில் அழைத்துப் பேச வைக்க வேண்டும். மக்களவைத் தேர்தலை விரைவில் சந்திக்க உள்ளோம். அதன் முதல் கட்டமாக இத்தகைய பிரசாரக் கூட்டங்களை நடத்திட வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.