புயல் தாக்கி ஒரு மாதமாகியும் இன்னமும் இயல்பு நிலை திரும்பாதது கவலைக்குரியது
கஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பாதது கவலைக்குரியது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்
கஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பாதது கவலைக்குரியது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
புதுகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்கும் முன் அவர் அளித்த பேட்டி:
1968 ஆம் ஆண்டு கீழவெண்மணி கிராமத்தில் கால்படி கூலியை உயர்த்திக் கேட்டதற்காக ஒடுக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்கள் சிறுகுடிசையில் வைத்துக் கொளுத்தப்பட்ட தினம் (டிச. 25) இன்று. கூலித் தொழிலாளர்களின் நிலை இன்னமும் மாறவே இல்லை. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி சட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வேலை நாள்களையும், அவர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலியையும் அதிகரிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை வரவேற்கத்தக்கது.
கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்தும் மக்களின் இயல்பு நிலை திரும்பாதது கவலைக்குரியது. பேரிடர் பாதிப்பு இயற்கை. ஆனால் அதிலிருந்து மக்களை மீட்க வேண்டியது அரசின் பொறுப்பு; கடமை. அரசு வழங்கும் நிவாரணத் தொகை போதுமானதல்ல.
நிவாரணப் பொருள்களும் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து ரூ. 15 ஆயிரம் கோடி நிதி கேட்டார். முதல் கட்டமாக ரூ. 1500 கோடி கேட்டார். எதுவும் வரவில்லை. மக்களைப் பற்றி கவலைப்படுகிறார்களா என்ற ஐயம் ஏற்படுகிறது என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.