விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கக் கூடாது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
விவசாயிகளின் முன் அனுமதி பெறாமல், முன்னறிவிப்பும் செய்யாமல் தன்னிச்சையாக மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை
உள்ளிட்ட தமிழகத்திலுள்ள 13 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இது கண்டனத்துக்குரியது.
உயர் மின்கோபுரங்கள் அமையும் பகுதியில் சுற்றுப்புறச் சூழல் மற்றும் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு மக்களுக்கு கொடிய நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்தத் திட்டத்தை எதிர்த்து காத்திருப்புப் போராட்டம், தூக்குக் கயிற்றில் தொங்கும் போராட்டம் என பல்வேறு நூதனப் போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகளில் 5 பேர் மயக்கம் அடைந்து, உடல்நிலை மிகவும் மோசமாகி சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால், மின்துறை அமைச்சரோ, வேளாண் துறை அமைச்சரோ விவசாயிகளைச் சந்தித்து அவர்களுடைய அச்சத்தைப் போக்கவோ அல்லது மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடக்காது என்று விவசாயிகளை நேரில் சந்தித்து உத்தரவாதம் கொடுத்தோ போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
உயர் அழுத்த மின்சாரத்தை நிலத்துக்கு அடியில் கேபிள் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர்.
இது குறித்து அரசு தீவிரமாக ஆராய வேண்டும். விவசாயிகளுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூகத் தீர்வு காண வேண்டும்.
அதுவரை விளை நிலங்கள் வழியாக புதிதாக மின் கோபுரங்கள் அமைக்கும் அனைத்துப் பணிகளையும் 13 மாவட்டங்களிலும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.