அதிமுகவினர் ரூ.2ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அமமுக வேட்பாளர்களே வெற்றிபெறுவார்கள்: தங்க. தமிழ்ச்செல்வன்
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் அதிமுக ரூ.2ஆயிரம் கோடி செலவு செய்தாலும், அமமுக வேட்பாளர்களே வெற்றிபெறுவார்கள் என அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் அதிமுக ரூ.2ஆயிரம் கோடி செலவு செய்தாலும், அமமுக வேட்பாளர்களே வெற்றிபெறுவார்கள் என அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அமமுக சார்பில் நவ.11ஆம் தேதி நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான தங்கதுரை தலைமை வகித்தார். அமமுக கொள்கை பரப்புச் செயலர் தங்க.தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியது: நிலக்கோட்டை தொகுதியில் மட்டுமின்றி, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளிலும் அமமுக அமோக வெற்றி பெறும். ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 8 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலையில் உள்ளார். அதன் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என அதிமுகவினர் நினைத்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ரூ.200 கோடி அல்ல ரூ.2ஆயிரம் கோடி செலவு செய்தாலும், அதிமுக வெற்றி பெற முடியாது. யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனை வாங்கிக் கொண்டு, குக்கர் சின்னத்தில் வாக்களித்து, அமமுக வேட்பாளர்களை தொகுதி மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் மீண்டும் போட்டியிடுவதில் தடை ஏற்படுத்தவோ, வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்வதற்கான முயற்சிகளையோ மேற்கொள்ள முடியாத வகையில் அனைத்து சட்ட முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்கதுரை பேசுகையில், நிலக்கோட்டை தொகுதியில் அதிமுகவுக்கு வாக்களிக்க கூடியவர்களுக்கு மட்டுமே 100 நாள் திட்டத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளிகளுக்கு பணி வழங்க மறுத்தால், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.