தாமிரவருணி புஷ்கரம் விழாவை அரசு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் : தமிழிசை கோரிக்கை
தாமிரவருணி மகாபுஷ்கரம் விழாவை அரசு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் திங்கள்கிழமை
தாமிரவருணி மகாபுஷ்கரம் விழாவை அரசு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டார்.
தாமிரவருணி புஷ்கரம் விழா வரும் வெள்ளிக்கிழமை (அக்.12) திருநெல்வேலியில் தொடங்கவுள்ளது. இதையொட்டி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் வேலூர், சேலம், ஒசூர், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட 12 இடங்களிலிருந்து விழிப்புணர்வு ரத யாத்திரை திங்கள்கிழமை தொடங்கியது. சென்னை திருவொற்றியூரில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ரத யாத்திரையைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் எஸ்.வாசுதேவன் தலைமை வகித்தார். விழாவில் மகாபுஷ்கரம் சிறப்பு மலரை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் வெளியிட்டார். அதை தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து தமிழிசை செளந்தரராஜன் பேசியது:
தாமிரவருணி புஷ்கரத்துக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. தமிழகத்தில் இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை கொண்டாடுவதற்கு போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை நிச்சயம் வரும் காலத்தில் மாறும்.
சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும்: தமிழக பாஜகவின் கோரிக்கையை ஏற்று தாமிரவருணி புஷ்கரம் விழாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதேபோல் தமிழக அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கி பக்தர்களுக்கு உதவ வேண்டும். குறுக்குத்துறை தைப்பூசம் படித்துறைகளில் குளிக்க பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதும் அங்கு ஏராளமானோர் குளித்து வரும் நிலையில் இந்த தடை தேவையற்றது.
தமிழக அரசு இத்தடையை நீக்கவில்லை எனில் தடையை மீறி அங்கே நீராடும் நிலை ஏற்படும். ஆந்திர மாநிலத்தில் புஷ்கரம் விழா அரசு நிகழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது.
அதேபோல், தமிழகத்திலும் தாமிரவருணி புஷ்கரம் விழாவை அரசு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்றார் தமிழிசை.
நிகழ்ச்சியில் சங்கர வித்யாலயா பள்ளி தாளாளர் ரங்கநாதன், பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கர், மாவட்ட பொதுச் செயலர் ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.