புதுதில்லி தீ விபத்து: திருச்சி மருத்துவரின் இறுதிச் சடங்குகளை சென்னையில் நடத்த முடிவு
புதுதில்லி ஹோட்டல் விபத்தில் உயிரிழந்த திருச்சி பல் மருத்துவரின் சடலத்தை சென்னைக்கு கொண்டு சென்று, அங்கு இறுதிச்சடங்குகளை நடத்த அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.
புதுதில்லி ஹோட்டல் விபத்தில் உயிரிழந்த திருச்சி பல் மருத்துவரின் சடலத்தை சென்னைக்கு கொண்டு சென்று, அங்கு இறுதிச்சடங்குகளை நடத்த அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.
திருச்சி ராமலிங்கநகரைச் சேர்ந்தவர் பல் மருத்துவர் சங்கரநாராயணன் (55). திருச்சி,சென்னையிலுள்ள தனியார் மருத்துவ மனையில் பணியாற்றி வந்தார். மேலும், திருச்சியில் தனியாக மருத்துவமனையும் நடத்தி வந்தார்.
மருத்துவக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக புதுதில்லி சென்றிருந்த இவர்,கரோல்பாக்கிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். இந்த ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவர் சங்கரநாராயணன் உயிரிழந்தார்.
இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். மகள் சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவப்படிப்பு பயின்று வருகிறார். மகன் அமெரிக்காவில் உள்ளார். மருத்துவரின் உறவினர்கள், குடும்பத்தினர் பெரும் பகுதியினர் சென்னையில் உள்ளதாலும், சென்னை வேளச்சேரி விஜயா நகரில் மருத்துவரின் வீடு உள்ளதாலும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு விமானம் மூலம் கொண்டு வரப்படும் சங்கரநாராயணனின் உடலை, சென்னைக்கு கொண்டு சென்று வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்குகள் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.