இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்
இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி 19 மீனவர்களைக் கைது செய்ததைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள்
இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி 19 மீனவர்களைக் கைது செய்ததைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் திங்கள்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதுடன் 19 மீனவர்களை கைது செய்தனர். தாக்குதலுக்குப் பயந்து கடலில் குதித்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், இலங்கை கடற்படையை கண்டிக்கும் விதமாக அனைத்து விசைப்படகு மீனவ சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை ராமேசுவரத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் செயலாளர் பி. ஜேசுராஜ் தலைமை வகித்தார்.
இதில் 10-க்கும் மேற்பட்ட மீனவ சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்புக்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மீனவ சங்கங்களின் நிர்வாகிகள் சவரிமுத்து, ரவி,பிரபாகரன், இருதயராஜ், தட்சிணாமூர்த்தி, இளங்கோ உள்ளிட்டவர்கள் கலந்தகொண்டனர்.
இதையடுத்து திங்கள்கிழமை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.