கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
சாலையோரம் தூங்கும்போது கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடித்த காஞ்சிபுரம் மாவட்டம், அணைக்கட்டு காவல் நிலைய போலீஸாருக்கு உயர்நீதிமன்றம்
சாலையோரம் தூங்கும்போது கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடித்த காஞ்சிபுரம் மாவட்டம், அணைக்கட்டு காவல் நிலைய போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
மானாமதி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த தம்பதி வெங்கடேசன்-காளியம்மாள். இவர்களது 3 வயது மகள் ஹரிணி. இந்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி, காஞ்சிபுரம் பழஞ்சூர் கிராமத்தில் உள்ள அணைக்கட்டு காவல் நிலையம் எதிரே உள்ள சாலையில் வெங்கடேசன் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு கண்விழித்து பார்த்தபோது, கொசு வலை அறுக்கப்பட்டு குழந்தை ஹரிணி காணாமல் போனது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அணைக்கட்டு காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தகவல் வெளியிட்ட காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி குழந்தையைக் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் ஆள்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்குரைஞர் பிரதாப், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத காரணத்தால், சங்கீதாவும் அவரது உறவினர்களும் சேர்ந்து குழந்தையைக் கடத்தியுள்ளனர். இந்த கடத்தல் தொடர்பாக சங்கீதா உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அணைக்கட்டு காவல் நிலைய ஆய்வாளர் நாகலிங்கம், உதவி ஆய்வாளர்கள் பிரேம் குமார், சங்கர் உள்ளிட்ட தனிப்படை போலீஸார் தீவிர தேடலுக்குப் பின்னர் குழந்தை ஹரிணியை கண்டுபிடித்தனர் என தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் தேவஅருள் பிரகாசும் போலீஸாரை பாராட்டி கருத்து தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏழையின் குழந்தையை பல்வேறு போராட்டங்களுக்கு நடுவே தேடி கண்டுபிடித்த போலீஸாரை பாராட்டுவதாக தெரிவித்ததுடன் ஆள்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.