தமிழகத்தில் அமையும் ராணுவ தளவாட வழித்தடத்தில் முதலீடு செய்யுங்கள்: நிர்மலா சீதாராமன்
தமிழகத்தில் அமையும் ராணுவ தளவாட வழித்தடத்தில் முதலீடு செய்யுமாறு உலக முதலீட்டாளர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அமையும் ராணுவ தளவாட வழித்தடத்தில் முதலீடு செய்யுமாறு உலக முதலீட்டாளர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலக நாடுகள் பலவும் பங்கேற்றுள்ளன. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கேற்றேன். இன்று இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கேற்றுள்ளேன்.
உலக அளவில் வளர்ச்சியிலும், தொழில் துறையிலும் இந்தியா தற்போது முன்னணியில் உள்ளது. இந்தியாவின் உணவுப் பணவீக்கம் மற்றும் மொத்தவிலைப் பணவீக்கம் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6 சதவீதத்துக்கு மேல் பராமரிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல்தாண்டிச் சென்று வணிகம் செய்தவர்கள் தமிழக மன்னர்கள். உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா கடந்த 4 ஆண்டுகளாக சிறந்து விளங்கி வருகிறது.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மூலம் நாடு முழுவதும் ஒரே சந்தை, ஒரே விலையாக மாற்றப்பட்டிருக்கிறது. மின்னணு நிர்வாகம், காலநிலை மாற்றம் போன்றவற்றிலும் இந்தியா சிறந்து விளங்கி வருகிறது.
முதல் முறையாக தமிழகத்தில் ராணுவ தளவாடக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் இரண்டை மத்திய அரசு உருவாக்க உள்ளது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைகிறது. சென்னை, ஓசூர், சேலம், கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் ராணுவத் தளவாட வழித்தடங்களுக்கு முதலீடுகளை வரவேற்கிறோம் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழ் மாணவர்கள் மற்ற நாடுகளின் மொழியையும் கற்பதன் மூலம் பிற நாடுகளிலும் வணிக வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்பைப் பெற முடியும். திறன் வளர்ப்பு பயிற்சிகளில் மற்ற மொழிப் பயிற்சிகளையும் சேர்த்து வழங்கினால் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.