திருவாரூர் தேர்தலை நிறுத்தி வைக்க மத்திய அரசிடம் ஆலோசிக்கப்பட்டதா?: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்தி வைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் கலந்தாலோசித்து அனுமதி பெறப்பட்டதா
திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்தி வைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் கலந்தாலோசித்து அனுமதி பெறப்பட்டதா என்பது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த தாமோதரன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையடுத்து காலியான திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28-இல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாத நிலையில், இப்போதைக்கு இடைத்தேர்தல் தேவையில்லை என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை. இதற்கு மத்திய அரசுடன் ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டும்.
தமிழக தலைமைச் செயலர் கடிதம் மூலம் கேட்டு கொண்டதற்காக அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்ய முடியாது. இது சட்டவிரோதமானது. எனவே, திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும். இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநிலத்தில் தேர்தலை நடத்துவதும், நிறுத்தி வைப்பதும் தேர்தல் ஆணையத்தின் வேலை. ஆனால் அதற்கு மத்திய அரசிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்தி வைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் கலந்தாலோசித்து அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 30-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.