பேரழிவு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்: நம்மாழ்வார் பிறந்த ஊரில் நாளை தொடங்குகிறது
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை கைவிடுதல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் இயற்கை வேளாண் விஞ்ஞானி மறைந்த கோ. நம்மாழ்வார் பிறந்த தஞ்சை
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை கைவிடுதல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் இயற்கை வேளாண் விஞ்ஞானி மறைந்த கோ. நம்மாழ்வார் பிறந்த தஞ்சை மாவட்டம், திருகாட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காட்டு கிராமத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
மன்னார்குடி நடேசன் தெருவில் உள்ள நம்மாழ்வார் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரழிப்புக்கு எதிரான பேரியக்க ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இப்பிரசாரம் பிப்ரவரி 19-ஆம் தேதி வரை நடத்துவது, தஞ்சாவூர், அரியலூர், காரைக்கால், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள மக்களை நேரடியாகச் சந்தித்து ஹைட்ரோ கார்பன், மீத்தேன், அனல்மின் திட்டங்கள், அணு உலைகள், நியூட்ரினோ - ஸ்டெர்லைட் ஆலை, சேலம் எட்டு வழிச்சாலை, நெய்வேலி நிலக்கரி மூன்றாவது விரிவாக்கத் திட்டம், கெயில் குழாய் பதிப்பு, உயர்மின் அழுத்த கோபுரங்கள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்து பிரசாரம் செய்வது, பிப்ரவரி. 23-ஆம் தேதி தஞ்சையில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
பேரியக்க நிறுவனர் க.கா.ரா. லெனின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநிலத் தலைவர் தங்கசண்முகசுந்தரம், பேரழிப்புக்கு எதிரான பேரியக்க நிர்வாகிகள் சிவபாலன் (பட்டுக்கோட்டை), விக்னேஷ் (கடலூர்), சுந்தரம், முகமதுரபிக் ( திருவாரூர்), பிச்சையப்பா (ஒரத்தநாடு) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.