முதலீட்டாளர் மாநாட்டில் 5 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்பு: அமைச்சர் எம்.சி.சம்பத்
இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரம் பிரதிநிதிகள்
இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்றிருப்பதாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் புதன்கிழமை தொடங்கிய உலக முதலீட்டாளர் மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது:
கடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் வந்த திட்டங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பல திட்டங்கள் வர்த்தக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்கி விட்டன. உலகளாவிய உற்பத்தி கேந்திரமாக தமிழகத்தை உருவாக்கிக் காட்டும் முனைப்பில் தமிழக அரசு உள்ளது. இந்த மாநாட்டுக்காக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நாம் மேற்கொண்டு வந்திருக்கும் முனைப்பான நடவடிக்கைகள் மற்றும் பிரசாரம் காரணமாக பங்கேற்றிருக்கும் உலக நாடுகளிலிருந்து கணிசமான அளவுக்கு நேரடி அந்நிய செலாவணி நமக்கு கிடைத்திருக்கிறது.
மேலும் கணிசமான முதலீடுகளுக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் நாம் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறோம். தற்போது இந்திய அளவில் முதல் 3 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அனைத்திலும் சிறந்த விதத்தில் செயல்படும் மாநிலமாகவும் தமிழகம் அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழ்நாடு வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்திக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. வானூர்தி மற்றும் ராணுவத் துறைகளில் உற்பத்தி தொடர்பான முதலீடுகளை ஈர்ப்பதற்கு இந்தக் கொள்கையில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதிலும் தமிழகம் முதன்மை இடத்தைப் பிடிக்கும் என்று நம்புகிறோம்.
நாட்டில் மிகச்சிறந்த ஒற்றைச் சாளர முறை வசதி தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என உறுதிபட நம்புகிறேன். பல்வேறு பிரகாசமான வாய்ப்புகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. எனவே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பதிவு செய்து பங்கேற்றுள்ளனர்.