முகப்பு
தமிழ்நாடு

வக்பு வாரியக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள் நியமன முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

மதுரை வக்பு வாரியக்கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற

Updated On : 24 ஜனவரி 2019, 2:41 am IST
பகிர்:


மதுரை வக்பு வாரியக்கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த சர்தார் பாஷா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: 
மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் 2017-இல் 30 உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களிடம் ரூ. 30 லட்சமும், பிற மதத்தை சேர்ந்தவர்களிடம் ரூ.35 லட்சமும் லஞ்சமாக வாங்கப்பட்டு, கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், வக்பு வாரியத் தலைவர் மற்றும் அமைச்சர் ஒருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. 
பணி நியமனம் செய்யப்பட்ட 30 பேரில் பலர் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்வதற்கு உரிய கல்வித் தகுதியைப் பெறவில்லை. ஆனால் அமைச்சர், வக்பு வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு உதவிப் பேராசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ-க்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வக்பு வாரியக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் சிபிஐ விசாரிக்குமாறு கோரி கடந்த நவம்பர் மாதமே புகார் அனுப்பியுள்ளார். அந்த மனுவை சிபிஐ அதிகாரிகள், தமிழக தலைமை செயலருக்கும் அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. வழக்கின் ஆவணங்களை பார்க்கும் போது தவறுகள் நடந்ததற்கான முகாந்திரம் 
இருப்பது தெரிகிறது. எனவே உதவிப்பேராசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. 
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து ஆறு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.