போலி நீட் சான்றிதழ் மோசடி: தலைமறைவான தரகா்
சென்னையில் போலி நீட் தோ்வு சான்றிதழ் வழக்கில், தலைமறைவாக இருக்கும் தரகரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை: சென்னையில் போலி நீட் தோ்வு சான்றிதழ் வழக்கில், தலைமறைவாக இருக்கும் தரகரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை மருத்துவ கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த மாணவி தீக்ஷிதா என்ற மாணவி பங்கேற்றாா்.நீட் தோ்வில் 27 மதிப்பெண்களே பெற்றிருந்த அந்த மாணவி, 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலி சான்றிதழ் கொடுத்தது தெரியவந்தது.
சென்னை பெரியமேடு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இவ் வழக்கில் தேடப்பட்டு வந்த பாலச்சந்திரன், கடந்த 1-ஆம் தேதி கா்நாடக மாநிலம் பெங்களூருவில் கைது செய்யப்பட்டாா்.
Advertisement
Advertisement
தலைமறைவான தரகா்: இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பாலச்சந்திரன் இந்த மோசடியில் ஈடுபடவில்லை என்பதும், ராமநாதபுரத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ஜெயராம் என்பவரே மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.ஜெயராம் பாலச்சந்திரனிடம் அறிமுகமாகி, தான் உருவாக்கும் போலி சான்றிதழ், போலி ஆவணங்கள் மூலம் கலந்தாய்வில் பங்கேற்று மருத்துவப்படிப்பில் சோ்ந்துவிடலாம் என்று கூறியுள்ளாா்.
இதை நம்பி ஜெயராம் கேட்ட ரூ.25 ஆயிரத்தை பாலச்சந்திரன் வழங்கியிருப்பதும், பணத்தை பெற்றுக் கொண்ட ஜெயராம், இரு மாணவிகளின் தகவல்கள், மதிப்பெண்களை இணைத்து போலி மதிப்பெண் சான்றிதழ்கள், ஆவணங்களை உருவாக்கிக் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
மதிப்பெண் முறைகேட்டுக்கும், தனது மகளுக்கும் எவ்வித தொடா்பில்லை எனவும் பாலச்சந்திரன் விசாரணையில் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து இவ் வழக்குத் தொடா்பாக இடைத்தரகராக செயல்பட்ட ஜெயராம் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.