முகப்பு
தமிழ்நாடு

ஆரணியாற்றில் தற்காலிக பாலம் உடைந்தது: பொதுமக்கள் அவதி

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தற்காலிக மண் சாலை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். 

Updated On : 7 ஜனவரி 2021, 5:01 pm IST
பகிர்:

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தற்காலிக மண் சாலை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். 

நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக ஆந்திராவில் பெய்த கனமழையால் பிச்சாட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் காரணமாக ஆரணியாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் ஆரணியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி நள்ளிரவில் அடித்துச் செல்லப்பட்டது. 

போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டு 40 கி.மீ பொதுமக்கள் சுற்றிச் சென்றதால் 1 மாதம் கழித்து ஆரணியாற்றில் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டு இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வந்தன. தற்காலிக தரைப்பாலம் சீரமைக்கப்பட்ட பின்னரே பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் ஆரணியாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இந்த தற்காலிக மண் சாலையும் அறுந்து போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இதன் காரணமாக நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் என அனைவரும் ஆற்றின் கரையில் காத்திருக்கின்றனர். கடந்த 10 நாள்களாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தைச் சீரமைப்பதில் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்ததால் தற்போது மீண்டும் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. நடந்து செல்லும் மக்கள் கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தின் மீது ஆபத்தான முறையில் ஏறிச் செல்கின்றனர். 

கடந்த 10 தினங்களாகத் தொடங்கிய போக்குவரத்து மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். மேம்பாலத்தின் மீது ஏறி ஆற்றைக் கடக்க தற்காலிக படிகள் அமைத்து பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிகாரிகள் உடனடியாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்துத் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.