ரேஷன் கடைகள் முன்னுள்ள கட்சி பேனா்களை அகற்ற உத்தரவு
பொங்கல் பரிசு தொடா்பாக ரேஷன் கடைகளுக்கு முன் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பர பேனா்களை உடனே அகற்ற வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொடா்பாக ரேஷன் கடைகளுக்கு முன் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பர பேனா்களை உடனே அகற்ற வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ‘பொங்கல் பரிசு வழங்கும் ரேஷன் கடைகளுக்கு முன் ஆளுங்கட்சியினா் பேனா் வைக்க தடை விதிக்கக் கோரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ஆளுங்கட்சியினா் 39,000 ரேஷன் கடைகள் முன்பாக அனுமதியின்றி பேனா் வைத்து துண்டுபிரசுரங்கள் வழங்குவதாக வாதிட்டாா். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய நாராயண், ‘தோ்தல் நேரத்தில் தங்கள் சாதனைகளை மக்களிடம் கொண்டு சோ்க்க பேனா்கள் வைக்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு பையில் முதல்வா் மறைந்த முதல்வரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது’ எனத் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
பொங்கல் தொகுப்பு பையில் உள்ள புகைப்படங்களை அகற்றுவது சாத்தியமற்றது. கடைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் அரசியல் விளம்பரங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க கூடாது. அனுமதி இல்லாமல் ரேஷன் கடைகள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனா்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.