சென்னையில் ஜன.11ல் இலங்கை துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்: வைகோ அறிவிப்பு
யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஜனவரி 11-ஆம் தேதி சென்னையில் இலங்கை துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்துள்ளார்
சென்னை: யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஜனவரி 11-ஆம் தேதி சென்னையில் இலங்கை துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கைத் தீவில் யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் - நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு இராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர்.
இதையும் படிக்கலாமே.. இந்தோனேசியாவில் பயணிகள் விமானத்தை காணவில்லை
Advertisement
Advertisement
இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப்படுகொலை செய்த இலங்கை அரசு, படுகொலையின் அடையாளங்கள் கூட இருக்கக்கூடாது என்பதற்காக மாவீரர் துயிலகங்களை இடித்தது. இப்போது யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துள்ளது. இது கொடுமையிலும் கொடுமை ஆகும்.
ஈழத் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி, இராணுவத்தை அங்கே குவித்துள்ள அரசு, தமிழ் இனத்தையே நிரந்தர அடிமைகளாக்கி அழித்தொழிக்கும் அக்கிரமத்தை தொடர்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாகும்.
ஈழத்தமிழர்கள், தாய்மார்கள், வயோதிகர்கள், சிறுவர்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்த கொடுமையும், ஈழத் தமிழ்ப் பெண்களை பாலியல் நாசமாக்கிக் கொலை செய்ததும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.
தமிழர்கள் சிந்திய இரத்தம் ஈழ மண்ணோடு கலந்திருக்கிறது. ஈழத் தமிழர்களின் எலும்புகள் அந்த மண்ணோடு சேர்ந்துள்ளன. மடிந்த மாவீரர்களின் மூச்சுக் காற்று அங்குதான் உலவுகிறது. ஈழத்தழர்களுக்கு நீதி கிடைக்காது; நடத்திய இனப் படுகொலைக்கும் எந்தக் கேள்வியும் இருக்காது என்று ராஜபக்சே அரசு மனப்பால் குடிக்கிறது.
யாழ் பல்கலைக் கழகத்தில் மீண்டும் நினைவு முற்றமும் - நினைவுத் தூணும் அமைக்கப்பட வேண்டும். நடைபெற்ற அக்கிரமத்தைக் கண்டித்து இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
நெஞ்சை பதற வைக்கும் இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருகிற 11 ஆம் தேதி காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெறும். தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், மதிமுகவினர் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.