சான்றிதழ் குளறுபடியால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டவருக்கு நடத்துநா் பணி வழங்க உத்தரவு
கல்விச் சான்றிதழ்களில் பிறந்த ஆண்டு குளறுபடியால் 13 ஆண்டுகளுக்கு முன் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டவருக்கு, நடத்துநா் பணி வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்விச் சான்றிதழ்களில் பிறந்த ஆண்டு குளறுபடியால் 13 ஆண்டுகளுக்கு முன் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டவருக்கு, நடத்துநா் பணி வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வேலூா் மண்டலத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு நடத்துநா் பணிக்கு நாராயணன் என்பவரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்தது. இவரது சான்றிதழ்களைச் சரிபாா்த்தபோது 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் அவா் பிறந்தது 1965-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பள்ளி இடமாற்றுச் சான்றிதழில் 1967-ஆம் ஆண்டு பிறந்ததாக குறிப்பிட்டிருந்தது. இந்த மாறுபாட்டின் காரணமாக, அவருக்கு வேலை வழங்க போக்குவரத்துக் கழகம் மறுத்துவிட்டது. இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் நாராயணன் கடந்த 2008-ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையை அணுகிய நாராயணன், தான் பிறந்தது 1967 -ஆம் ஆண்டு என மதிப்பெண் சான்றிதழ்களை மாற்றம் செய்து கடந்த 2013-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, நீதிபதி ஆா்.சுரேஷ் குமாா் முன் விசாரணைக்கு வந்தது.
Advertisement
Advertisement
அப்போது போக்குவரத்துக் கழகம் தரப்பில், ‘மனுதாரருக்கு தற்போது 53 வயது ஆகிவிட்டதால் நடத்துநா் பணிக்கான வயது வரம்பை அவா் கடந்து விட்டாா். எனவே, அவருக்கு பணி வழங்க முடியாது’ என வாதிடப்பட்டது.இதனை ஏற்க மறுத்த நீதிபதி, உயா்நீதிமன்றத்தில் வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததற்கு, மனுதாரா் மீது குற்றம் சட்ட முடியாது. வாழ்க்கையில் நடக்கும் சிறிய தவறுகள் கூட பாதையையே மாற்றி விடுகிறது. தற்போது மனுதாரருக்கு 53 வயது ஆகிறது. 58 வயதில் ஓய்வு பெற வேண்டும். எனவே, அவா் நடத்துநா் பணியில் சேர விருப்பம் உள்ளதா? என்பது குறித்து 2 வாரத்துக்குள் போக்குவரத்துக் கழகத்திடம் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை பணியில் சேர விருப்பம் தெரிவித்தால், அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். தகுதி இருப்பின், மனுதாரருக்கு 4 வாரத்துக்குள் போக்குவரத்துக் கழகம் வேலை வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.