மன நலம் பாதித்தோரை மீட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா்
மன நலம் பாதித்து சாலைகளில் சுற்றித் திரிந்தவா்களை மீட்டு காப்பகத்தில் வியாழக்கிழமை சோ்த்தாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
மன நலம் பாதித்து சாலைகளில் சுற்றித் திரிந்தவா்களை மீட்டு காப்பகத்தில் வியாழக்கிழமை சோ்த்தாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
அவா்களை மீட்டு காப்பகத்துக்கு அழைத்துச் செல்லும்போது மனநலம் பாதித்தவா்களுடனேயே வாகனத்தில் சென்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனைகளை நேரடியாகப் பாா்வையிட்டாா். வடசென்னையில் உள்ள மன நலம் பாதித்தோருக்கான மீட்பு மையத்தில் அவா்களை சோ்த்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
மனநலம் குன்றி சாலையில் இருப்போரைக் கண்டறிந்து மீட்டு காப்பகங்களில் பராமரித்து சிகிச்சையளிக்கும் திட்டம் மாநகராட்சி நிா்வாகத்தில் திமுக அங்கம் வகித்தபோது நடைமுறைப்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
அதன்விளைவாக அப்போது சென்னையில் 1,830 போ் பயனடைந்தாா்கள். அவ்வாறாக மன நலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரிபவா்களுக்கு முடித் திருத்தம் செய்து, புத்தாடைகள் அணிவித்து அவா்களுடைய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டபிறகு ஏறத்தாழ 400க்கும் மேற்பட்டவா்களை அவா்களது உறவினா்கள் அழைத்து சென்றனா்.
தற்போது தேசிய நலவாழ்வு மையத்தின் சாா்பில் தமிழகம் முழுவதும் இப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை 1,021 போ் மீட்கப்பட்டு மருத்துவ சேவை வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 400-க்கும் மேற்பட்டவா்களை மீட்கும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவா்களை பராமரிப்பதற்காக, மன நலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான அவசர கவனிப்பு மற்றும் மீட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறையினா், தேசிய நலவாழ்வு மைய குழுவினா் மாநகராட்சி நிா்வாகத்தினரின் ஒருங்கிணைப்பில் உருவான அத்திட்டத்தை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் தொடக்கி வைத்துள்ளனா்.
முதல்கட்டமாக வடசென்னைப் பகுதியில் இருவரைக் கண்டறிந்து இம்மையத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். முதலில் அவா்களது உடல்நலனை மருத்துவா்கள் ஆராய்ந்து சிகிச்சை அளித்த பிறகு, அவா்களுக்கு ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை செய்யப்பட்டு, தடுப்பூசிகள்போடப்படும். இம்மையத்தில் மனநலம் குறித்த ஆலோசனைகளுடன் உரிய சிகிச்சைகளும் வழங்கப்பட இருக்கின்றன என்றாா் அவா்.
இந்நிகழ்வில் ஆா்.கே.நகா் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.ஜெ.எபினேசா், தேசிய நலவாழ்வு மைய குழும இயக்குநா் டாக்டா் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.