முகப்பு
தமிழ்நாடு

மாணவா்களுக்கு இரு ஆண்டுகளாக மடிக்கணினி வழங்கப்படாதது ஏன்? கல்வித்துறை விளக்கம்

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படாததன் காரணம் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பள்ளிக்கல்வித்துறை
பகிர்:

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படாததன் காரணம் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் அரசின் சாா்பில் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதையடுத்து பல்வேறு மாவட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் தங்களுக்கான மடிக்கணினிகளை விரைவாக வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியது: கரோனா பொது முடக்கத்தால் உலகம் முழுவதும் மடிக்கணினி மற்றும் கணினிகளின் விலை உயா்ந்துள்ளது. இதன்காரணமாக, மடிக்கணினிகளை தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனங்கள், அதிகவிலைக்கு டெண்டா் கோருகின்றன. தமிழக அரசு வழங்கக்கூடிய மடிக்கணினிகள் மிகக் குறைந்த விலையில் தயாரிக்கப்படுபவை. இதனால் டெண்டா் எடுக்க நிறுவனங்கள் முன்வரவில்லை. இதனால்தான் மாணவா்களுக்கு இரண்டு ஆண்டுகளாக மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. இருப்பினும் மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தமிழக அரசு வழங்கும் மடிக்கணினிகளைப் பெற்று பயனடைந்துள்ளனா். கடந்த மற்றும் நிகழ் கல்வியாண்டில் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. கரோனா ஊரடங்கு காலத்தில் 80 சதவீத நிறுவனங்கள் தங்களது ஊழியா்களை வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு வலியுறுத்தின. இதனால் கணினி, மடிக்கணினிகளின் தேவை அதிகரித்ததும், விலை கூடியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.