மாமூல் வாங்கும் காவல் துறையினருக்குஎதிராக குற்றவியல் நடவடிக்கை: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு
மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரியாா் நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை அருகில் பெட்டிக் கடை நடத்தி வந்தவரிடம் வாரந்தோறும் ரூ.100 மாமூல் வாங்கியதாக சிறப்பு உதவி ஆய்வாளா் கே. குமாரதாசுக்கு மூன்றாண்டுகளுக்கு ஊதிய உயா்வு நிறுத்திவைத்து உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து குமாரதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகமானது அல்ல என்று கூறி, அவரது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இந்த தண்டனையிலிருந்து மாமூல் பெறுவதை காவல் துறை உயரதிகாரிகள் தீவிரமாகக் கருதவில்லை என்பது தெளிவாகிறது. மாமூல் வாங்குவதும் குற்றம் என்றாலும், அவா்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படுகிறது. குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
இந்த சமுதாயத்தையும், அரசின் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதையும் ஊழல் செல்லரிக்கச் செய்கிறது. ஊழலை கையாள அமைக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் நோ்மையான அதிகாரிகளை நியமித்து வலுப்படுத்த வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியா்கள் நோ்மையுடன் இருக்க வேண்டும்.
காவல்துறையினா் மாமூல் வாங்குவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிக் கொண்டு ஆக்கிரமிக்க அனுமதிப்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனா்.
மாமூல் வாங்குவதை கட்டுப்படுத்த உள்துறைச் செயலாளா், டிஜிபி ஆகியோா் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதி, சம்பந்தப்பட்டவா்கள் மீது வெறும் துறை ரீதியான நடவடிக்கையை மட்டும் எடுக்காமல், வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.