முகப்பு
தமிழ்நாடு

மணப்பாறையில் தினமணி சார்பில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி!

“தாகம் தணிப்போம்” என்ற கருப்பொருளில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி நாளிதழ் சார்பில் தமிழகம் முழுவதும் போலீசாருக்கு குடிநீர் பாட்டில், குளிர்பானம், குளிர் மோர் உள்ளிட்ட வழங்கப்படுகின்றன. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
மணப்பாறையில் வெள்ளிக்கிழமை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க போலீசாருக்கு குளிர் கண் கண்ணாடி வழங்கிய காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.ராமநாதன்.
பகிர்:

மணப்பாறை: தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் மற்றும் திருச்சி விஜயலட்சுமி கண் மருத்துவமனையும் இணைந்து, திருச்சி மாவட்டம் மணப்பாறை உள்கோட்ட போலீசார் சுமார் 100 பேருக்கு குளிர் கண் கண்ணாடிகள், குடிநீர் பாட்டில், குளிர்பானம் மற்றும் நீர்மோர் உள்ளிட்டவற்றை வெள்ளிக்கிழமை வழங்கினார்.

கடும் வெயில், காற்றில் பணியாற்றி வரும் போலீசாருக்கு உதவும் வகையில் “தாகம் தணிப்போம்” என்ற கருப்பொருளில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி நாளிதழ் சார்பில் தமிழகம் முழுவதும் போலீசாருக்கு குடிநீர் பாட்டில், குளிர்பானம், குளிர் மோர் உள்ளிட்ட வழங்கப்படுகின்றன. 

இதன் ஒரு பகுதியாக, மணப்பாறை காவல் உள்கோட்டத்திற்கு உள்பட்ட சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து, அனைத்து மகளிர், குற்றப்பிரிவு போலீசார்களுக்கு திருச்சி விஜயலட்சுமி கண் மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்ட குளிர் கண் கண்ணாடிகள், ஜேசிஐ மணவை கிங்ஸ் நிறுவனம் வழங்கிய குளிர்பானம், எம்.ஐ.கே ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வழங்கிய குடிநீர் பாட்டில் மற்றும் கும்பகோணம் தமிழ் பால் வழங்கிய குளிர் மோர் ஆகியவை வழங்கும் நிகழ்வு மணப்பாறை காவல் நிலையம் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

இந்த நிகழ்வில் மணப்பாறை காவல் உள்கோட்ட துணை கண்காணிப்பாளர் ந.ராமநாதன் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் டி.ஆர்.கணேசன், காவல் உதவி ஆய்வாளர்கள் ஆர்.பிரதீப், லியோனியா ஆகியோர் போலீசாருக்கு கண் கண்ணாடிகளையும், குளிர்பானங்களையும் வழங்கினர். 

அதைத்தொடர்ந்து டிஎஸ்பி ராமநாதன் பேசியதாவது: மக்களின் நலம் கருதி இரவு பகல் வெயில் மழை காற்று ஆகியவற்றை பாராது உழைத்து வரும் காவலர்களின் நலன் கருதும்  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி நாளிதழின் தாகம் தணிப்போம் பணி போற்றுதலுக்குரியது. காவல்துறை சார்பில் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.

திருச்சி விஜயலட்சுமி கண் மருத்துவமனை மருத்துவர் என்.சிவகுமார் காவலர்களுக்கு கண் கண்ணாடியினை வழங்கி, கூறிய ஆலோசனையில் சோற்றுக்கற்றாழையை தொடர்ந்து முகத்தில் பயன்படுத்தி வருவதால் சோர்வும் சரும பிரச்னைகளும் தவிர்க்க முடியும் என கூறினார்.

நிகழ்வில் திருச்சி விஜயலட்சுமி கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் என்.சிவக்குமார், தமிழ் பால் நிறுவன விற்பனை பிரதிநிதி பி.விஜயகுமார், அரசு ஒப்பந்தக்காரர்கள் சண்முகம், பாலசுப்பிரமணியன், ஜேசிஐ மணவை கிங்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் ஜெயம் சக்திவேல், முல்லை சந்திரசேகர், கணேஷ்ராஜா எம்.ஐ.கே ஸ்போர்ட்ஸ் நிறுவன அலுவலர்கள்,  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் திருச்சி பதிப்பு மேலாளர் தி.கதிரவன், வர்த்தக பிரிவு மேலாளர் எல்.வெங்கடேஸ்வரன், முதுநிலை விற்பனை மேலாளர் எஸ்.கிரீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சி குறித்த உற்பத்தி பிரிவு மேலாளர் அ.ஜோம்ஸ் விளக்கவுரை அளித்து பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments