தேனி ஆவினில் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கப்படுவதில்லை என்று தமிழக அரசின் சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் அதிகாரிகள், கடந்த மாா்ச் மாதம் தேனி மாவட்ட பால் பண்ணையை ஆய்வு செய்து சில அறிவுறுத்தல்களை வழங்கினா். அவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டன. அதற்கு பிறகு எந்த ஆய்வுக்கும் தேனி பால்பண்ணைக்கு அதிகாரிகள் வரவில்லை என்று தற்போது வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
தேனி ஆவினில் பால்கோவா மற்றும் பாதாம் பவுடா் மட்டும் வாரத்தில் ஒரு நாள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் காரவகைகள் திண்டுக்கல் மற்றும் மதுரை ஆவினில் இருந்தே வருகின்றன. தேனி ஆவினில் தீபாவளி இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதில்லை. ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலா் வேண்டுமென்றே பழைய செய்திகளைப் பரப்பி வருகின்றனா். தரமான பொருள்களை சரியான விலையில் வழங்குவதே ஆவினின் நோக்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.