அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்!
ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது பற்றி...
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வழக்கை முன்னுதாரணமாக வைத்து சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரூ.2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சுமாா் 3,500 கிலோ சூடோபீட்ரின் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கடந்தாண்டு மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்தனா். தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபா் சாதிக் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் தில்லி போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் ரூ.1 லட்சம் உத்தரவாத தொகையுடன் கடந்தாண்டே ஜாமீன் வழங்கியிருந்தது.
ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறையின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கிலும் ஜாபர் சாதிக் கைதியாகி இருந்ததால் சிறையில் இருந்து வெளியே வரமுடியாமல் இருந்தார்.
இந்த நிலையில், தில்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா வழக்கை முன்னுதாரணமாக வைத்து ஜாபர் சாதிக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி சுந்தர் மோகன் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.