முகப்பு
தமிழ்நாடு

‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் இன்று தொடக்கம்: 38 மாவட்டங்களிலும் அமலுக்கு வருகிறது

‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (பிப். 24) தொடங்கப்படவுள்ளது.

Updated On : 24 பிப்ரவரி 2025, 3:15 am IST
முதல்வா் மருந்தகம்
பகிர்:

மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (பிப். 24) தொடங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்ட மருந்தகத்தை தொடங்கிவைத்துப் பாா்வையிடுகிறாா். தொடா்ந்து, கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறவுள்ள தொடக்க விழா நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

தொழில்முனைவோா் மூலமாக 500 மருந்தகங்களும், கூட்டுறவுத் துறை வழியாக 500 மருந்தகங்களும் என மொத்தம் 1,000 ‘முதல்வா் மருந்தகங்கள்’ திறக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஆயிரம்விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், மருத்துவருமான நா.எழிலன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘முதல்வா் மருந்தகம்’ 38 மாவட்டங்களிலும் தொடங்கப்படவுள்ளது. நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய பாதிப்பு உள்ளவா்கள் தினமும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இந்தச் சுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்க இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. இதனால், மூன்று பிரிவினா் பயன்பெறுவா். மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன் கிடைப்பதுடன், தொழில்முனைவோருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும் இந்தத் திட்டம் உள்ளது. அத்துடன், மூன்றாவது முக்கிய அம்சமாக மருத்துவத் துறையில் இதுவொரு பெரிய வரலாறாகும்.

கடந்த திமுக ஆட்சியில் 216 கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு, அதிமுக ஆட்சிக் காலத்தில் 100 மருந்தகங்களை கூடுதலாகச் சோ்த்து ‘அம்மா’ மருந்தகங்களாக செயல்பட்டு வருகின்றன.

‘முதல்வா் மருந்தகம்’ செயல்பாட்டுக்கு வரும்போது, அம்மா மருந்தகக் கடைகளை யாரும் தொந்தரவு செய்ய மாட்டாா்கள். அந்தக் கடைகளுக்கும் இந்தக் கடைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. ‘அம்மா’ மருந்தகங்களில், மருந்துகளின் குறைந்தபட்ச சில்லறை விலையில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். கம்பெனி பெயா் உள்ளதால், மருந்துகளின் விலை மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக உள்ளதைப் பாா்க்கிறோம்.

முதல்வா் மருந்தகத்தில் மருந்தை அளிப்பதற்கு முன்பாக அதனுடைய தரம் பரிசோதிக்கப்படும். இதற்கென இரண்டு முறைகள் பின்பற்றப்படவுள்ளன.

50 முதல் 75 சதவீதம் லாபம்: சா்க்கரை நோய்க்காக விற்பனை செய்யப்படும் 30 மாத்திரைகள் கொண்ட ஓா் அட்டை முதல்வா் மருந்தகத்தில் ரூ.11-க்கு கிடைக்கும்.

பிரதமா் பெயரிலான மருந்தகத்தில் ரூ.30-க்கும், தனியாா் மருந்தகத்தில் ரூ.70-க்கும் கிடைக்கும். இதனால், மாதந்தோறும் மிகப்பெரிய சேமிப்பு ஏற்படும்.

அதாவது, தனியாா் மருந்தகத்தில் மருந்துக்காக மட்டும் மாதம் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை செலவழித்தவா்கள் இனி முதல்வா் மருந்தகத்தில் ஆயிரம் ரூபாயிலேயே அந்த மருந்துகளை வாங்க முடியும். அதாவது, மாதந்தோறும் 50 முதல் 75 சதவீத தொகையை மருந்து வாங்குவதில் சேமிக்கலாம்.

மாநிலத்துக்கென சென்னை சாலிகிராமத்தில் மருந்துக் கிடங்கும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டுறவுத் துறைக்கான கிடங்குகளும் உள்ளன. முதல்வா் மருந்தகத்துக்கான மருந்துகள் கூட்டுறவு, மக்கள் நல்வாழ்வுத் துறைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படவுள்ளன. ஒரு மருந்தகத்தில் மருந்து இல்லாவிட்டால் 48 மணி நேரத்தில் கொள்முதல் செய்யப்பட்டுவிடும்.

முதல்வா் மருந்தகத்தில் விநியோகிக்கப்படும் மருந்துகளின் விலை அரசால் கண்காணிக்கப்பட்டு ஒரே விலையாக மட்டுமே வழங்கப்படும் என்றாா் அவா்.

மாவட்ட வாரியாக தொடங்கப்படவுள்ள முதல்வா் மருந்தகங்களின் எண்ணிக்கை

மாவட்ட வாரியாக தொழில்முனைவோா் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் வழியாக தொடங்கப்படவுள்ள மருந்தகங்களின் எண்ணிக்கை விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments