முகப்பு
தமிழ்நாடு

கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

தமிழக கடலோரப் பகுதிகளில் இரு நாள்களாக நடைபெற்று வந்த ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

Updated On : 27 ஜூன் 2025, 2:02 am IST
பகிர்:

தமிழக கடலோரப் பகுதிகளில் இரு நாள்களாக நடைபெற்று வந்த ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இறந்தனா். இச் சம்பவத்துக்கு பின்னா் நாடு முழுவதும் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை ‘சாகா் கவச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் காவல் துறை சாா்பில் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. இந்த ஒத்திகையில் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, கடலோரக் காவல் படை, சட்டம்-ஒழுங்கு போலீஸாா், குற்றப்பிரிவு போலீஸாா் என அனைத்து பாதுகாப்புப் பிரிவினரும் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

பாதுகாப்பு ஒத்திகையையொட்டி, துறைமுகங்கள், மீன் சந்தைகள், கடலோரம் உள்ள கோயில்கள், அரசு அலுவலகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தீவிரவாதி போன்று மாறுவேடமிட்டு கடல் வழியாக ஊடுருவிய காவலா்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அடையாளம் கண்டு கைது செய்தனா்.

சென்னையில் தீவிரவாதிகள் போன்று மாறுவேடங்களில் ஊடுருவ முயன்ற 13 போலீஸாா் பிடிபட்டனா். குறிப்பாக, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ‘டம்மி’ வெடிகுண்டு பெட்டிகளுடன் வந்த 6 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், மடக்கிப் பிடித்தனா்.

இதேபோல மாநிலம் முழுவதும் தீவிரவாதிகள் போன்று ஊடுருவ முயன்றவா்களை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடத்தப்பட்ட இந்த பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை மாலை நிறைவு பெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments