முகப்பு
தமிழ்நாடு

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் மாநாடு: பிரேமலதா

ஜனவரியில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாடு குறித்து பிரேமலதா விஜயகாந்த்.

Updated On : 21 நவம்பர், 2025 at 8:25 AM
தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்
பகிர்:

நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும், மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டும் மாநாடாக தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 அமையும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூர் மாவட்டம், பாசார் கிராமத்தில் நடக்க இருக்கிறது. அதற்காக கட்சி சார்பில் ஒரு கடிதம் உங்களுக்காக அனுப்பி வைத்திருக்கிறேன்.

நம் தலைவர் இல்லாமல் நாம் நடத்த இருக்கின்ற முதல் மாநாடு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தும் மாநாடு, இந்த மாநாட்டின் வெற்றி உங்கள் ஒவ்வொருவரின் வெற்றி. எனவே மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 மாநாட்டிற்கு என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே நீங்கள் அனைவரும் பெருந்திரனாக வந்து அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர் தலைமையில் ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி சகோதரிகள், தொண்டர் அணி சகோதரர்கள் மற்றும் தொண்டர்களும், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், ஒவ்வொரு கிளைகளிலிருந்தும் பொதுமக்களையும் அழைத்து கொண்டு இந்த மாநாட்டில் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டும்.

வரவிருக்கும் 2026 தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக இந்த மாநாடு அமைய இருப்பதோடு இந்த வெற்றி ஒவ்வொருவரின் வெற்றி என்பதை மனதில் கொண்டு ஒவ்வொரு ஊராட்சியிலும், கிளையிலும் பேனர்கள், கொடிகள் அமைத்து தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கடலூர் மாநாட்டில் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டும்.

வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கடலூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாசார் கிராமத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடத்திட பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும். மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் நடைபெறவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Premalatha Vijayakanth on the DMDK convention to be held in January.

முழு கட்டுரையைப் படிக்க →