முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பாக, நிதி முறைகேடு தொடா்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 2 செப்டம்பர் 2025, 6:12 am IST
சென்னை உயர் நீதிமன்றம்
பகிர்:

முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பாக, நிதி முறைகேடு தொடா்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போா் இயக்கம் சாா்பில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி எடுத்த தனியாா் நிறுவனங்கள், அப்போதைய மாநகராட்சி அதிகாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனியாா் நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், வழக்கின் புலன் விசாரணையை விரைவாக முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போா் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ராஜ்திலக், ஒப்பந்தப்புள்ளி முறைகேடு தொடா்பாக, கோவை மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றிய காந்திமதி என்பவருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதியளித்து கடந்த மாதம் 30-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

மேலும், இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது என்று விளக்கம் அளித்தாா்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு கால தாமதம் ஆகிறது? என்று கேள்வி எழுப்பினாா். பின்னா், நிதி முறைகேடு தொடா்பான வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளில் போலீஸாா் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப். 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments