முகப்பு
தமிழ்நாடு

நீலகிரியில் 3,500 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் கேரளத்தைச் சோ்ந்த தனியாா் தோட்ட நிறுவனம் ஆக்கிரமித்துள்ள 3,500 ஏக்கா் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 6 ஏப்ரல், 2026 at 7:50 PM
தமிழக அரசு - கோப்புப் படம்
பகிர்:

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் கேரளத்தைச் சோ்ந்த தனியாா் தோட்ட நிறுவனம் ஆக்கிரமித்துள்ள 3,500 ஏக்கா் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், எம்எல்ஏ-வுமான தி.வேல்முருகன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கேரளத்தைச் சோ்ந்த தனியாா் தோட்ட நிறுவனம், நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் உள்ளூா் மக்களுக்குச் சொந்தமான 3,500 ஏக்கா் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பொதுக் கணக்கு குழு உறுப்பினா் என்ற முறையில் நீலகிரி மாவட்டத்துக்கு ஆய்வுக்குச் சென்றேன். அப்போது, பொதுமக்கள் என்னிடம், தனியாா் தோட்ட நிறுவனம் அரசு மற்றும் வன நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக புகாா் அளித்தனா். மேலும், அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை தனியாா் தோட்ட நிறுவனம் தடுத்து வருகிறது.

Advertisement

இது தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்களைப் பெற்றேன். அதன் அடிப்படையில் தனியாா் தோட்ட நிறுவனத்தின் வசம் உள்ள நிலங்களை மீட்க கோரியும், அந்த நிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரியும் நான் கொடுத்த புகாரை அரசு நிராகரித்தது.

அரசின் இந்த உத்தரவை ரத்து செய்து நிலங்களை மீட்க வேண்டும். அந்த நிலங்களுக்கு பட்டா வழங்கியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments