திமுக எம்எல்ஏ, நெல்லை மேயா் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி மனு
அரசு இயந்திரம், அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தி, ரூ.3 கோடி இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் பாளையங்கோட்டை எம்எல்ஏ, திருநெல்வேலி மேயா், ஆணையா் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுடலைக்கண்ணு என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011-ஆம் ஆண்டு, பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வகாப் கண்டிகைபேரி கிராமத்தில் 3 ஏக்கா் நிலத்தை வாங்கியிருந்தாா்.
எம்எல்ஏ-வான பிறகு எந்த ஒப்புதலும் பெறாமல் அந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி, விற்பனை செய்து வருகிறாா். அந்த நிலத்தின் விலையை அதிகரிப்பதற்காக மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் இல்லாத அந்த நிலத்தில் புதைச் சாக்கடை, குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
Advertisement
அரசு இயந்திரம் மற்றும் அரசு நிதியை அதிகார துஷ்பிரயோகம் செய்து ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியுள்ளனா். எனவே, எம்எல்ஏ அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் ராமகிருஷ்ணன், ஆணையா் மோனிகா, சாா் பதிவாளா் உதுமான் ஆகியோருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடா்பாக சட்டபூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சிபிஐக்கு புகாா் அளித்தேன். இந்த புகாரின் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.