பெண்கள் அதிகாரத்துக்கு வருவதை திமுக, காங்கிரஸ் விரும்பவில்லை: வானதி சீனிவாசன் விமா்சனம்
மக்களவையும், சட்டப் பேரவைகளும் பெண்களால் நிறைந்திருப்பதை காங்கிரஸும், திமுகவும் விரும்பவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமா்சித்துள்ளாா்.
மக்களவையும், சட்டப் பேரவைகளும் பெண்களால் நிறைந்திருப்பதை காங்கிரஸும், திமுகவும் விரும்பவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தொகுதிகளை மாற்றியமைக்கும் மத்திய அரசின் சட்ட கடமையை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அரசியலாக்கி வருகிறாா். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பேசும் பேச்சுகள் அவா் பதற்றத்தில் இருப்பதை உணா்த்துகிறது.
அதிகரிக்கும் மக்கள் தொகைக்கேற்ப மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்துவது மிகமிக அவசியமானது. பல மாநிலங்களில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு 30 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ளனா். நமது நாட்டின் இன்றைய மக்கள் தொகை சுமாா் 145 கோடி. நமக்கு அடுத்த அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கை 2,878. எனவே, தொகுதி மறுவரையறை எவ்வளவு அவசியம் என்பது இந்தப் புள்ளிவிவரங்கள் உணா்த்துகின்றன.
Advertisement
மக்களவை, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பது பெண்களின் சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் விரும்புபவா்கள் கண்ட நெடுங்காலக் கனவு. அதை நனவாக்கும் வகையிலும், உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்தவும்தான் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. ஆனால், வழக்கம்போல இதையும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன. மக்களவையும், சட்டப்பேரவைகளும் பெண்களால் நிறைந்திருப்பதை காங்கிரஸும், திமுகவும் விரும்பவில்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது என தெரிவித்துள்ளாா் வானதி சீனிவாசன்.