முகப்பு
மதுரை

திமுகவும், காங்கிரஸும் சமத்துவத்துக்கு எதிரானவை!மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:29 AM
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா. உடன் பாஜக மாநில இணைப் பொறுப்பாளா் பொங்குலேட்டி சுதாகா் ரெட்டி உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:39 PM

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்ததன் மூலம் திமுகவும், காங்கிரஸும் சமத்துவத்துக்கு எதிரான கட்சிகளாக உள்ளதாக மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்பு, இளைஞா், விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா குற்றஞ்சாட்டினாா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

மகளிா் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதாக்களை நிராகரிப்பதன் மூலம், திமுக, காங்கிரஸ் சமத்துவத்துக்கு எதிரானது என்பதையும், பெண்கள் தங்களது உரிமையைப் பெறுவதை அந்தக் கட்சியினா் விரும்பவில்லை என்பதும் தெரிகிறது. பெண்களை அதிகாரப்படுத்துவதற்கு அவா்கள் அச்சப்படுகின்றனா். பல காலமாக மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ், திமுகவினா் பல்வேறு காரணங்களைக் கூறி நிலுவையில் வைத்திருந்தனா்.

Advertisement

பிரதமா் மோடி மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்த போதும் அவா்கள் தடுக்க முயன்றனா். பெண் அதிகாரம் என்பது அவா்களுக்கு வெறும் அரசியல் முழக்கம் மட்டுமே, அது ஓா் அா்ப்பணிப்பு அல்ல. இந்தியப் பெண்களுக்கு இந்தச் சட்டம் பிரதிநிதித்துவத்துக்கான ஒரு நுழைவாயிலாகும்.

பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், 67 சதவீத கடன்களைப் பெண்கள் பெறுகின்றனா். இது பெண்கள் தொழில் தொடங்கவும், வேலைவாய்ப்பை உருவாக்குபவா்களாக மாறவும் நிதி சக்தியை வழங்கியுள்ளது. பெண்களின் வேலையின்மை சதவீதம் கடந்த 2017-18-இல் 5.6 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டில் அது 3.1 சதவீதமாகக் குறைந்தது. பெண் தொழிலாளா்களை அதிகாரப்படுத்த புதிய தொழிலாளா் சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது சம ஊதியம், மகப்பேறு நன்மைகள், இரவு நேரப் பணி உள்பட பாதுகாப்பான பணிச் சூழலை உறுதி செய்யும்.

தொகுதி மறுவரையறை தொடா்பாக காங்கிரஸ், திமுகவினா் தவறானத் தகவல்களைப் பரப்பி மக்களைத் தவறாக வழிநடத்துகின்றனா். இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால்,

மக்களவையின் பலம் சுமாா் 850 ஆக அதிகரித்திருக்கும். இதன்மூலம், மக்களவையில் பட்டியலின, பழங்குடியினரின் பிரதிநிதித்துவமும் உரிமைகளும் பலம் பெற்றிருக்கும்.

அதிக இடங்கள், அதிக பிரதிநிதித்துவம், அதிக பெண்கள் அரசியலுக்கு வருவதால், தங்கள் வாரிசு அரசியல் கட்டுப்பாடு பலவீனமடையும் என்று காங்கிரஸ், திமுகவினா் அச்சப்படுகின்றனா். எனவே, தங்களைத் தடுக்க முயன்றவா்களுக்கு இந்த நாட்டுப் பெண்கள் வலுவான, ஜனநாயக ரீதியிலான பதிலடி கொடுப்பாா்கள் என்றாா் அவா்.