புதுச்சேரியில் திமுகவும் காங்கிரஸும் பலியாகிவிட்டன: எல்ஜேகே
புதுச்சேரியில் திமுகவும் காங்கிரஸும் பலியாகிவிட்டதாக எல்ஜேகே தலைவர் தெரிவித்தது குறித்து...
புதுச்சேரியில் திமுகவும் காங்கிரஸும் இறந்துவிட்டதாக லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. சில கட்சிகள் கூட்டாக இணைந்தும் சில கட்சிகள் தனியாகவும் போட்டியிட உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பேசிய லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், காமராஜ் நகர் தொகுதியின் வேட்பாளருமான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின், "மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, புதுச்சேரியில் காங்கிரஸும் திமுகவும் தற்கொலை செய்துகொண்டு, கிட்டத்தட்ட பலியானதைப் போல காண்கிறேன்.
திமுகவும் காங்கிரஸும் ஒருவரையொருவர் பலியாக்கிக் கொள்ளப்போகிறார்கள். அதை அவர்கள் வெற்றிகரமாகச் செய்துவிட்டனர்.
திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஒரு பெரிய சண்டை நிலவுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது. எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் இருப்பது உறுதியாகத் தெரிகின்றது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக 25 இடங்கள் வெல்லும்” எனத் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.