தேசியவாதம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை! பாஜக எம்பிக்கு ஆ. ராசா பதிலடி!
பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பேச்சுக்கு திமுக எம்பி ஆ. ராசாவின் பதில் பற்றி...
தேசியவாதம் பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை என்று மக்களவையில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கு திமுக எம்பி ஆ. ராசா பதிலடி கொடுத்தார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்துவதுடன், அவர்களுக்கு 283 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543 இல் இருந்து 850 ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் சட்டத் துறை அமைச்சர் இன்று (ஏப்.16) அறிமுகம் செய்துள்ளார்.
இந்த சட்டத் திருத்த மசோதாக்கள் மீது மக்களவை உறுப்பினர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.
Advertisement
இந்த விவாதத்தின் போது கர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பேசுகையில், மொழியை வைத்து திமுக பிரிவினைவாதம் பேசி வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவருக்கு பதிலளித்து முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ. ராசா பேசியதாவது:
”நாட்டை பிரிவினைப்படுத்தும் கட்சி திமுக என்ற குற்றச்சாட்டை தேஜஸ்வி சூர்யா முன்வைத்துள்ளார். 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போர் தொடுத்த போது, மற்ற மாநிலங்களைவிட அதிக நன்கொடையாக தமிழ்நாடு ரூ. 6 கோடி அளித்தது.
1999 ஆம் ஆண்டு வாஜ்பாயி ஆட்சியில் கார்கில் போருக்காக கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு ரூ. 100 கோடி கொடுத்தது. தேசியவாதம் பற்றி இவர் எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை.
மாநில சுயாட்சியை மதிக்காமலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் எங்களின் அடையாளத்தை பாதுகாக்க மட்டுமே குரல் கொடுக்கிறோம்” எனத் தெரிவித்தார்.